உக்ரைன் VS ரஷ்யா.. அதிகரிக்கும் டென்ஷன்.. இந்தியா நிலைப்பாடு என்ன? ராஜ்நாத்சிங் பதில்
டெல்லி: உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் உலக அமைதியை விரும்புவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனால் சர்வதேச அளவில் பதற்றமான சூழல் உருவாகி இருக்கிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகள் களத்தில் இறங்கியது. ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனாவும் களத்தில் இறங்கியது. இதனால் ஐரோப்பாவுக்கு ஆபத்து என்ற அறிவித்தது அமெரிக்கா.

எல்லை
கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது. மேலும், அதிநவீன ஆயுதங்களையும் ரஷ்யா அனுப்பி வருகிறது. உக்ரைன் எல்லையில் சுமார் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 80 ஆயிரம் வீரர்கள் அங்கிருந்த நிலையில், இப்போது வீரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

அணு ஆயுத பயிற்சி
சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் தலைமையில் அணு ஆயுத பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த போர் பதற்றத்தை தவிர்க்க பல நாட்டுத் தலைவர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். எந்த விவகாரத்தையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க விரும்புவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா இது எதற்குமே சரியான பதிலளிக்காமல் இருந்துவந்தது. அமெரிக்கா தொடர்ந்து ரஷ்யாவை எச்சரித்து வந்தது.

இந்தியா
இந்நிலையில், உக்ரைன் ரஷ்யா விவகாரம் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், ''இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது. நாங்கள் எப்போதும் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். ரஷியா - உக்ரைன் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி அமெரிக்க அதிபர், ரஷிய அதிபருடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா
அமெரிக்க அதிபர் தனது சார்பாக சில முயற்சிகளை எடுத்துள்ளார். எந்த வகையிலும் அமைதியை மட்டுமே நிலைநாட்ட இந்தியா விரும்புகிறது. பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில் எப்படியும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். இந்தியா அமைதியை மட்டுமே விரும்புகிறது. நாங்கள் எப்போதும் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம்'' என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications