சாக்குபோக்கு சொல்லிட்டு இருக்காதீங்க.. இந்து மத தலைவர் கொலை! வங்கதேசத்திற்கு இந்தியா கண்டிப்பு
டெல்லி: வங்கதேசத்தில் இந்து மத தலைவர் பபேஷ் சந்திர ராய் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத் துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாக்குபோக்குகள் சொல்லிக்கொண்டு இருக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வங்கதேசத்திற்கு கண்டிப்புடன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் வங்கதேச அரசு திண்றியது. நிலைமை கையை மீறி சென்றதால், ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை விட்டு விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி வகித்து வருகிறார். முகம்மது யூனுஸ் பதவியேற்றதில் இருந்தே வங்கதேசத்தில் மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, வங்கதேசத்தில் சிறுபான்மையின மக்களாக உள்ள இந்துக்கள் உள்ளிட்டோர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் இந்து கோவில்கள் சேதப்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் வங்கதேசத்தில் இந்து மத தலைவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் பசுதேப்பூர் என்ற கிராமத்தில் பாபேஷ் சந்திர ரய் என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள பூஜா உத்பூஜன் பரிஷத் என்ற அமைப்பின் பீரால் பகுதிக்குக் தலைவராக இருந்தார்.
இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் இருந்து வந்த இவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளது. பின்னர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு இந்தியாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்ஷ்வல் இது குறித்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:- வங்கதேசத்தில் இந்து மத தலைவர் ஸ்ரீபாபேஷ் சந்திர ராய் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். வங்கதேசத்தில் இடைக்கால அரசின் கீழ் இந்து சிறுபான்மையினர் திடமிட்டு தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாகுவது தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்பாக இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி சுற்றித் திரிகிறார்கள். இந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக் கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில் சாக்குபோக்குகளை கண்டுபிடிக்காமல் பாகுபாடு எதுவும் இன்றி இந்துக்கள் உள்பட அனைத்து மத சிறுபான்மையினரையும் பாதுகாப்பதை இடைக்கால அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications