அமித் ஷாவை சீண்டிய கனடா.. இனியும் பொறுக்க மாட்டோம்.. பறந்தது சம்மன்
டெல்லி: இந்தியா - கனடா நாடுகளின் உறவில் சமீபகாலமாக தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த நாட்டின் துணை அமைச்சர் ஒருவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கனடாவுக்கு இந்தியா சம்மன் அனுப்பியுள்ளது.
கனடா நாட்டில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரடியாக குற்றம் சாட்டியிருந்தார். இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டு அரசின் குற்றச்சாட்டை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இருப்பினும் குற்றச்சாட்டுகள் ஓய்ந்த பாடில்லை. அதன் தொடர்ச்சியாக கனடா நாட்டின் அமைச்சர் ஒருவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கனடா நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன், இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக வன்முறையை தூண்ட திட்டமிட்டுள்ளார் என்று கூறியிருந்தார். இது உலக அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது அடிப்படை ஆதாரம் கூட இல்லாத அபத்தமான குற்றச்சாட்டு என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அமெரிக்காவும் கூட அமித் ஷா மீதான குற்றச்சாட்டு கவலையளிக்கிறது என்று கூறியிருந்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக கனடா நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். கனடா நாட்டின் உயரதிகாரிகளே தவறான தகவல்களை ஊடகங்களில் கசியவிட்டுள்ளனர்.
இது இந்தியா - கனடா உறவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். கனடா நாட்டின் பொது பாதுகாப்பு நிலைக்குழு ஆலோசனைக் கூட்டத்திலேயே டேவிட் மோரிசன் இந்த குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். கனடாவுக்கு அனுப்பியுள்ள சம்மனில், இந்தியா இந்த விவகாரத்துக்கு கடுமையான எதிர்வினையாற்றும் என்பதை குறிப்பிட்டுள்ளோம்.
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கை போக்கி, இழிவுபடுத்துவதற்காகவே இப்படிப்பட்ட தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு கசிய விடுகிறார்கள். கனடா அரசின் இந்த பொறுப்பற்ற மலிவான உக்தி இரு நாடுகளின் உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே உதவும்.
கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் அறிக்கையில் சீனா, வடகொரியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவையும் எதிரி என குறிப்பிட்டுள்ளனர். அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் இந்தியாவுக்கு எதிராக மீண்டும் ஒரு பொய் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் கண்ணோட்டமே மாற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம் என்று கனடா நாட்டின் உயரதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலமே அளித்துள்ளனர். இந்திய தூதரக அதிகாரிகள் சிலர் தங்களின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது மரபுகளை மீறும் செயல்.
இது இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல். தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கனடா அரசு துன்புறுத்தி வருகிறது. இதை எல்லாம் எந்த வகையிலும் அவர்கள் நியாயப்படுத்த முடியாது. இது நிலைமையை இன்னும் மோசமடைய செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications