E20 பஞ்சாயத்தே முடியல.. அதற்குள்ள E85? எத்தனால் 85% இருக்கும்! மத்திய அரசால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
டெல்லி: இந்தியச் சாலைகளில் இனி பெட்ரோல் வாசனையை விட எத்தனால் வாசனையே அதிகம் வீசப்போகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மத்திய அரசு இப்போது E85 எனும் பிரம்மாண்ட ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. இது குறித்த வரைவு அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இப்போது எத்தனால் கலக்கப்படுகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் E20 பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. ஏற்கனவே இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும், கச்சா எண்ணெய் விலை, அந்நிய செலாவணி உள்ளிட்ட காரணங்களால் மத்திய அரசு E20 பெட்ரோலை ஊக்குவிக்கிறது.

எரிபொருள் தட்டுப்பாடு
2016-லேயே இதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டாலும், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இப்போது நாடு முழுக்க கிட்டத்தட்ட அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் எத்தனால் கலந்த பெட்ரோல் தான் விற்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதை அடுத்த லெவலுக்கு மத்திய அரசு கொண்டு செல்லவுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே 100% எத்தனால் மூலம் இயங்கும் காரை ஓட்டி இதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபித்துள்ளார். கரும்பு, மக்காச்சோளம் மற்றும் தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால், இந்தியாவில் உபரியாகக் கிடைப்பதே இந்த நம்பிக்கைக்குக் காரணம். இது வெளிநாட்டு இறக்குமதியை நம்பியிருக்காமல், உள்நாட்டு விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பலன் அளிக்கும் ஒரு முயற்சியாகும்.
E85 எரிபொருள்
அடுத்த கட்டமாக மத்திய அரசு E85 எரிபொருளைக் கொண்டு வரத் திட்டம் போட்டுள்ளது. இருப்பினும், இதைச் சாதாரண பெட்ரோல் இன்ஜின்களில் பயன்படுத்த முடியாது. இதற்கு 'பிளெக்ஸ் ஃபியூயல் வெகிக்கிள்ஸ்' எனப்படும் பிரத்தியேக இன்ஜின்கள் தேவை. எத்தனால் அரிப்புத் தன்மை கொண்டது என்பதால், அதற்கு ஏற்றவாறு இன்ஜினின் சீல்கள் மற்றும் குழாய்கள் வடிவமைக்கப்பட வேண்டும்..
ஏற்கனவே இதற்கான முதற்கட்ட வாகனப் பரிசோதனைகள் முடிந்துவிட்டதாகவும், சந்தை மட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் E85 எரிபொருளுக்கெனத் தனி விநியோகக் குழாய்கள் (Nozzles) மற்றும் சேமிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும்.
தவிர்க்க முடியாதது
பெட்ரோலை விட எத்தனாலின் எரிசக்தி சற்றே குறைவு என்பதால், மைலேஜ் சிறிது குறைய வாய்ப்புள்ளது. மேலும், வாகனத் தயாரிப்பாளர்கள் மிக விரைவாக இந்தத் தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்யும் சூழலில், E85 என்பது ஒரு தவிர்க்க முடியாத மாற்று. இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளதுடன், சுற்றுச்சூழலும் மாசுபடுவதிலிருந்து தப்பிக்கும்.
கோரிக்கை
இருப்பினும், ஏற்கனவே பழைய வண்டிகளை வைத்திருப்போர் என்ன செய்வார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி.. அவர்களுக்கு E20 பெட்ரோல் தொடர்ந்து கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. மேலும், E85 பெட்ரோலை அவசர அவசரமாகச் சந்தைக்குக் கொண்டு வராமல்.. அதில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீவிரமாக ஆராய வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications