மார்ச் முதல் 12 முதல் 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி.. மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: இந்தியாவில் வரும் மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயதுடையவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் (NTAGI) மருத்துவர் என்கே அரோரா தெரிவித்துள்ளார்.
கொரோனா 2019 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளில் பரவி நிறைய பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. Sars cov 2 எனும் கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாறி புதிய வேரியண்ட்டாகி புதிய அலையை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.
இவற்றை விட மிக முக்கியம் கொரோனாவுக்கான தடுப்பூசிகளான கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை போட்டுக் கொள்வது. இவை இரண்டுமே இரு தவணை செலுத்தி கொள்ள வேண்டும். கோவிஷீல்டு இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள 84 நாட்களும் கோவாக்சின் இரு தவணை செலுத்தி கொள்ள 28 நாட்களும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள்
நாட்டில் முதல் முறையாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா 2ஆவது அலை வீரியமடைந்தவுடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது.

15 டூ 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 15- 18 வயது பிரிவினருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த 10 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணைநோய் உள்ளவர்கள், கொரோனா முன்கள வீரர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கியது.

12 டூ 14 வயது பிரிவு
இந்த நிலையில் 12 முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில் 15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவில் 7.4 கோடி பேரும் ஜனவரி இறுதிக்குள் முதல் டோஸை செலுத்திக் கொள்வார்கள்.

மார்ச் முதல் கோவாக்சின்
இவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே அனுமதி என்பதால் 28 நாட்கள் இடைவெளியில் பிப்ரவரி மாதம் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொள்வார்கள். எனவே மார்ச் மாதம் முதல் 12 - 14 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்க விரும்புகிறோம்.

சிறார்களுக்கு கோவாக்சின்
இதனால் மார்ச் மாதம் முதல் 12 முதல் 14 வயதினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கிறது என்றார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி 12 முதல் 17 வயது சிறார்களுக்கு சோதனை வெற்றியடைந்தது. இதன் அடிப்படையில் இந்த வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அவசர கால அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications