ஷேக் ஹசீனாவுக்கு முன் கோத்தபாய ராஜபக்சேவையும் இந்தியா "பாதுகாக்க" முயன்றது? இலங்கை ஊடகங்கள் பகீர்!
டெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அந்நாட்டைவிட்டு தப்பி ஓடி வந்ததும் இந்தியா தற்போது அடைக்கலம் கொடுத்துள்ளது; இதேபோல இலங்கையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் புரட்சி வெடித்த போது ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சேவுக்கு "பாதுகாப்பு" வழங்க இந்திய அரசு முன்வந்ததாக இலங்கை ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டுள்ளன.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதன் உச்சமாக வன்முறைகள் வெடித்தன. மாணவர்கள் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு ராணுவம் கெடு விதித்தது.

இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா அந்நாட்டை விட்டே தப்பினார். அங்கிருந்து தப்பிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியாதான் அடைக்கலம் கொடுத்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் தர மறுத்தும் வருகின்றன.
இந்த பின்னணியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்த போது இந்தியா எப்படி செயல்பட்டது என்பது தொடர்பான தகவல்களை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 2022-ம் ஆண்டு இலங்கையில் மிகப் பெரிய பொருளாதார பேரழிவு ஏற்பட்டது. அப்போது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பதவி வகித்தனர். இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் மிக அதீதமாக உயர்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
2022-ம் ஆண்டு இலங்கையில் பல மாதங்கள் நீடித்த புரட்சியால் முதலில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அத்துடன் உயிருக்கு அஞ்சி இலங்கையை விட்டு தப்பி ஓடி பின்னர் நாடு திரும்பினார். அதேபோல கோத்தபாய ராஜபக்சேவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒவ்வொரு நாடாக அடைக்கலம் தேடிப் போனார். அப்போது கோத்தபாய ராஜபக்சேவின் ஜனாதிபதி மாளிகையை புரட்சியாளர்கள் சூறையாடினர். அதே பாணியில்தான் தற்போது வங்கதேச பிரதமர் மாளிகையும் சூறையாடப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி பதவியை கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு தப்பி ஓட முயன்ற போது அவரைப் பாதுகாக்க இந்திய அரசு முயன்றதாம். கோத்தபாயவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என இந்தியத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாம். இந்தியா பாதுகாப்பு வழங்க முன்வந்தும் அதனை ஏற்க மறுத்தே கோத்தபாய ராஜபக்சே நாட்டை விட்டே தப்பி ஓடினார் என்கின்றன இலங்கை ஊடகங்கள்.












Click it and Unblock the Notifications