முடிவுக்கு வரும் 50% வரி? இந்தியா உடனான பேச்சுவார்த்தைக்கு பின் அமெரிக்கா சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: டிரம்ப்பின் வரியால் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் இரு தரப்பிற்கும் இடையே மிக முக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இரு தரப்புமே இந்த மீட்டிங் பாசிட்டிவாக சென்றதாகக் கூறியிருப்பதால் சீக்கிரமே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகும் எனத் தெரிகிறது.
இந்தியா அமெரிக்கா இடையே பல காலமாகவே நல்ல ஒரு வர்த்தக உறவு இருந்தது. ஆனால், டிரம்ப் வந்த பிறகு அதில் பெரிய சிக்கல் ஏற்பட்டது. இந்தியா மீது டிரம்ப் தரப்பு 50% வரிகளை விதித்துள்ளது இரு நாட்டு வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் இந்தியா அமெரிக்கா வர்த்தகம் 40% வரை பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மீண்டும் தொடங்கும் பேச்சுவார்த்தை
டிரம்ப்பின் இந்த வரியால் இந்தியா அமெரிக்கா இடையே நடந்து வந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டது. அதாவது ஐந்து சுற்றுக்கள் முடிந்த போதுதான், திடீரென வரியை டிரமப் அறிவித்திருந்தார். இதனால் ஆகஸ்ட் 25 முதல் 29 வரை நடைபெறவிருந்த ஆறாவது சுற்று ஒத்திவைக்கப்பட்டது. இப்போது நீண்ட கேப்பிற்கு பிறகு இந்தியா அமெரிக்கா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.
நேற்று டெல்லியில் இது தொடர்பாக இரு தரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தையாகும். இரு தரப்பினரும் இந்தப் பேச்சுவார்த்தை பாசிட்டிவாக இருந்ததாகவே தெரிவித்தனர். நேற்றைய தினம் டெல்லியில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியின் உதவிச் செயலாளர் பிரெண்டன் லிஞ்ச், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வாலை சந்தித்தார். இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
பாசிட்டிவ் மீட்டிங்
இது பாசிட்டிவான ஒரு கூட்டமாகவே இருந்ததாக அமெரிக்கத் தூதரகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதிலும் பேச்சுவார்த்தை பாசிட்டிவாகவே சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்யும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு
மத்தியத் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு நடந்த பேச்சுவார்த்தை பாசிட்டிவாக இருந்தது. வர்த்தக ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. இரு தரப்பிற்கும் நன்மை கொடுக்கும் ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தை ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் வரி விதிப்பு ஓரளவுக்குக் குறைய வாய்ப்பு இருக்கிறது. இது இந்திய வர்த்தகர்களுக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுக்கும். இருப்பினும், இப்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதால் இறுதி முடிவை எட்ட மேலும் சில காலம் ஆகும் என்றே தெரிகிறது.
பின்னணி
கடந்த வாரம் தான் டிரம்ப், வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், சீக்கிரமே நல்ல முடிவு வரும் என்பது போலத் தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியைத் தனது நல்ல நண்பர் என குறிப்பிட்ட அவர், மீண்டும் அவருடன் பேசுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், நல்ல முடிவை எட்டுவதில் இரு நாடுகளுக்கும் சிரமம் இருக்காது என்றே தான் கருதுவதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்திருந்த பிரதமர் மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான நட்பு நாடுகள் என்று குறிப்பிட்டார். மேலும், பேச்சுவார்த்தையை முடித்து வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் டிரம்ப் உடன் பேச தானும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications