பஞ்சாயத்து ஓவர்! காங், ஆம் ஆத்மி அதிரடி! முதல்முறையாக பாஜகவை எதிர்கொள்ளும் "இந்தியா!" எங்கு தெரியுமா
டெல்லி: இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக முக்கியமான தேர்தல் ஒன்றில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்து "இந்தியா" கூட்டணி பாஜகவை எதிர்கொள்கிறது.
பிரதமர் மோடி மற்றும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதைப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்தச் சூழலில் தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எடுத்த முன்னெடுப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கியது.

இந்தக் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி எனப் பெயரும் வைக்கப்பட்டது. அடுத்தடுத்த கூட்டங்களை இந்தியா கூட்டணி நடத்திய போதிலும், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது.
இந்தியா கூட்டணி: குறிப்பிட்ட சில மாநிலங்களில் கூட்டணி அமைப்பதில் சிக்கல் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாகக் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் இருப்பதாகக் கூறப்பட்டது. இதற்கிடையே ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சி முதல்முறையாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இதை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதா உறுதி செய்துள்ளார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி இணைந்து போட்டியிடும் என்று கூறிய ராகவ், அங்கே இந்தியக் கூட்டணிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், அடுத்து நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவே முதல்முறை: இது தொடர்பாக அவர் கூறுகையில், "முதல்முறையாக இந்தத் தேர்தல் இந்தியா vs பாஜகவாக இருக்கும்.. இந்தத் தேர்தலுக்குப் பிறகு, ஸ்கோர் கார்டு இந்தியா 1 - BJP 0ஆக இருக்கும்.. சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா தனது முழு பலத்துடன் போராடி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்யும். இதை ஒரு சாதாரண தேர்தலாகக் கருத வேண்டாம். இந்தியா vs பாஜக என அமைப்பது இதுவே முதல்முறை..
ஜனவரி 18-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாங்கள் பெறப்போகும் க்ளீன் ஸ்வீப் வெற்றி 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொடக்கமாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். இப்போது இருக்கும் சர்வாதிகார மற்றும் மக்கள் விரோத அரசில் இருந்து மக்களைக் காப்பாற்றுவோம். இந்தியா vs பாஜக எனப் போட்டி அமைந்தால் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை இது நமக்கு உணர்த்திவிடும்" என்றார்.
நம்பிக்கை: ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸும் சில வாரங்களாகவே தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. நீண்ட ஆலோசனைக்கு பிறகே இப்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேயர் தேர்தலில் இணைந்து போட்டியிடும் போது கிடைக்கும் வெற்றி என்பது வரும் லோக்சபா தேர்தலிலும் தொகுதிப் பங்கீட்டிற்கு உதவும் என்று இரு கட்சிகளுமே நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி இப்போது டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியும் செல்வாக்கு பெற்று இருக்கிறது. இதன் காரணமாகவே தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் இருக்கிறது. ஆம் ஆத்மி இரு மாநிலங்களிலும் தனியாகப் போட்டியிடவும் ரெடி என அறிவித்து இருந்தது. வரும் காலங்களில் இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications