கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்த இந்தியா இப்போ இறக்குமதியை நம்பியுள்ளது.. திட்டமிடல் தோல்வி?
டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வோம் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் சூழலில், சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதை பாருங்கள்:
கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு தேசிய மற்றும் சர்வதேச தடுப்பூசி உற்பத்தியாளர்களான ஃபைசர், மாடர்னா போன்றவற்றுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்வோம்.
உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஒரு உயிரியல் தயாரிப்பு என்பதால் தர சோதனைக்கு நேரம் எடுக்கும். பாதுகாப்பான தயாரிப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, ஒரே இரவில் இதைச் செய்ய முடியாது. உற்பத்தி திறன் அதிகரிப்பு ஒரு படிப்படியான செயல்முறையாக இருக்கும்.
அவசரகால சூழல் பயன்பாட்டிற்காக இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதல் பெற்ற மூன்றாவது தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி. அது ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
தடுப்பூசி விநியோகத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை சரியான பாதையில் செல்கிறது. பதிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களிடையே 90% முதல் டோஸ் ஊசி போடப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்பட்ட முன்களதொழிலாளர்களில் 84% பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி , கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதலில் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மே மாதம் முதல் 3ஆவது கட்டமாக 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
2020 ஆகஸ்ட் மாதம், இந்தியா தடுப்பூசி விநியோக திட்டத்தை வகுத்துள்ளதாக மோடி பெருமையுடன் அறிவித்தார். ஆயினும், அவர் முதல் தடுப்பூசி ஆர்டரை 2021 ஜனவரி மாதம்தான் செய்தார். இதனால் ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது அலை இந்தியாவை முழு தீவிரத்துடன் தாக்கிய நேரத்தில், வெறும் 0.5% இந்தியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 3.1% ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பு 66 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை நன்கொடையாக அல்லது விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் கொரோனா அதிகரித்த பிறகுதான் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது. போதிய அளவுக்கு தடுப்பூசி இருப்பதாகத்தான் அப்போது அரசு கூறி ஏற்றுமதி செய்தது. ஆனால் இப்போது இறக்குமதி செய்தாவது அனைவருக்கும் தடுப்பூசி தருவோம் என கூறியுள்ளது சுகாதாரத்துறை.
மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் முகாமிட்டு ஃபைசர் போன்ற அந்த நாட்டு தடுப்பூசிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய முயற்சிகளை எடுத்து வருகிறார்.
எனவேதான், இந்தியா முன்கூட்டியே திட்டமிடாமல் தங்கள் மக்களையும் ஆபத்தில் சிக்க வைத்து, உலக நாடுகளுக்கு செல்ல வேண்டிய தடுப்பூசிகளையும் இருப்பு வைக்க ஆரம்பித்துள்ளது என்று டைம் உள்ளிட்ட பிற நாட்டு ஊடகங்கள் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளன.
இந்தியா, ஸ்பூட்னிக் வி உட்பட, மூன்று தடுப்பூசிகளைப் பயன்படுத்துகிறது. இதில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவை 2021ம் ஆண்டு மே மாதத்தில் சுமார் 7.92 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளன. ஆனால் இவை போதவில்லை. தடுப்பூசிகளுக்காக மக்கள் மருத்துவமனை படிகளை ஏறி இறங்கி வருகிறார்கள்.