ஆசியாவிலேயே சிறந்த "கொடையாளிகள்".. போர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த அதானி.. தமிழர் ஷிவ் நாடார்!
டெல்லி: ஆசியாவின் சிறந்த கொடையாளிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அசோக் குட்டா உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
உலக புகழ்பெற்ற போர்ப்ஸ் இதழில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்களின் பெயர்கள் சிறந்த கொடையாளிகள் பட்டியலில் இடம்பெறுவது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படுகிறது.
எடப்பாடி டெல்லி போக அண்ணாமலை காரணமா?
ஆசியாவின் சிறந்த கொடையாளிகள்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் போர்ப்ஸ் (Forbes) இதழ் சார்பில் ஆண்டுதோறும் உலக செல்வந்தர்கள், மக்கள் செல்வாக்குமிக்க தலைவர்கள், அதிக புகழ்பெற்ற மனிதர்கள் என பல்வேறு பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆசிய அளவில் சிறந்த நன்கொடையாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தலைப்பில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் 16-ம் ஆண்டுக்கான பட்டியல் இதுவாகும்.
பட்டியலில் இடம்பிடித்த கவுதம் அதானி
இந்தப் பட்டியலில் குஜராத்தைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இடம்பெற்றுள்ளார். அதானி அறக்கட்டளையை 1996-ம் ஆண்டு தொடங்கிய கவுதம் அதானி, மின்சார உற்பத்தி, எண்ணெய் உற்பத்தி, துறைமுக கட்டுமானம் உள்ளிட்ட பல தொழில்களை செய்து வருகிறார். அதேபோல, அவர் பல நன்கொடைகளையும், சமூக பணிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக, கடந்த ஜூன் மாதம் தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது சமூக சேவை பணிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி பணத்தை அளிப்பதாக உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
ஷிவ் நாடார் பெயர்
அதேபோல, இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் இடம்பிடித்திருக்கிறார். ஹெச்.சி.எல். ஐடி நிறுவனத்தின் துணை நிறுவனராக இருக்கும் இவர், ஷிவ் நாடார் அறக்கட்டளை மூலமாக ரூ.8,000 கோடிக்கு மேல் சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். நிகழாண்டில் சமூக நலப் பணிகளுக்காக ரூ.11 ஆயிரத்து 600 கோடி பணத்தை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஒரு முறை..
இதனிடையே, போர்ப்ஸ் இதழ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அளவில் சிறந்த கொடையாளிகள் யார் என்ற பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில், இந்தியாவிலேயே அதிக நன்கொடை வழங்கும் நபராக ஷிவ் நாடார் இடம்பெற்றிருந்தார் என்பது நினைவுகூரத்ததக்கது. இந்நிலையில், தற்போது ஆசியாவிலேயே சிறந்த கொடையாளிகள் பட்டியலிலும் ஷிவ் நாடாரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.