அரசு உயர் அதிகாரிகளின் சேர்களில் வெள்ளை துண்டு ஏன்? கிட்டத்தட்ட 95% பேருக்கு தெரியாது
டெல்லி: இந்திய அரசு அலுவலகங்களுக்குச் சென்றால், அங்குள்ள அதிகாரிகளின் நாற்காலிகளில் ஒரு விஷயத்தை நீங்கள் நிச்சயம் கவனிக்கலாம். அந்த சேரில் அதிகாரி இருக்கிறாரோ இல்லையோ, அங்குள்ள நாற்காலியில் ஒரு வெள்ளைத் துண்டு கச்சிதமாக விரிக்கப்பட்டிருக்கும். இது ஏதோ ஒரு சாதாரணத் துணி அல்ல; இந்திய அதிகார வர்க்கத்தின் அதிகார அடையாளமாகவே இது பார்க்கப்படுகிறது. இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை நாம் பார்க்கலாம்.
பொதுவாக இந்திய அரசு அலுவலங்களில் உயர் அதிகாரிகளின் சேரை குறிக்கும் விதமாக வெள்ளை கலர் துண்டு இருக்கும். சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டான ஒரு விவாதம், இந்த வெள்ளைத் துண்டு தொடர்பானது. இது இதன் பின்னணியை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

விவாதம்
ஐஐடி டெல்லி முன்னாள் மாணவர் கேதன் என்பவர் தான் இது தொடர்பாக போஸ்ட் ஒன்றைப் போட்டிருந்தார். அதுவே மீண்டும் இந்த விவாதத்தைத் தூண்டியது. குறிப்பாக 2024ல் உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புகார்
உத்தரப் பிரதேசத்தில் சில எம்பிக்களும், எம்எல்ஏக்களும் ஒரு புகார் அளித்தனர். அதாவது, அதிகாரிகளுடன் நடக்கும் கூட்டங்களில் அதிகாரிகளின் நாற்காலியில் துண்டு இருக்கிறது.. ஆனால் எங்கள் சேர்கலில் அது இல்லை என்பதே அந்தப் புகார். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் ஒரு அவசர உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கு இணையான உயரத்தில், துண்டு இருக்கம் சேர்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. லக்னோவில் உள்ள தலைமைச் செயலகத்தில் மட்டும் வாரத்திற்கு இரண்டு முறை 1000 துண்டுகள் மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள்.
காரணம்
துண்டிற்காகத் தலைமைச் செயலாளர் புகார் போய் இருக்கும் நிலையில், இந்த கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.. இதன் வேர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தான் உள்ளது. இதற்கு இரண்டு சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. அன்றைய காலத்தில் அதிகாரிகள் குதிரைகளில் நீண்ட தூரம் பயணம் செய்வார்கள். புழுதி மற்றும் வியர்வை சேரில் படக்கூடாது என்பதற்காகவே வெள்ளை துண்டு பயன்படுத்தப்பட்டது. குதிரைகள் மறைந்தாலும், துண்டுகள் மட்டும் அப்படியே தங்கிவிட்டன.
2. இன்னொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அதாவது இந்தியர்கள் எப்போதும் தலைக்கு எண்ணெய் வைப்பார்கள். அந்த எண்ணெய்யால் நாற்காலி உறைகள் கறையாகாமல் இருக்கவே இந்தத் துண்டுகளை அறிமுகப்படுத்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
இரண்டில் எது உண்மையான காரணம் என்று உறுதியாகத் தெரியாது என்ற போதிலும் இந்த இரண்டில் ஒன்று தான் அந்த வெள்ளை துண்டிற்கு காரணமாம்!
வெள்ளை கலர் ஏன்?
சரி ஏன் வெள்ளை கலர் என்ற கேள்வி வரலாம்.. வெள்ளை நிறத் துணியில் அழுக்குப் பட்டால் உடனே தெரிந்துவிடும் என்பதால், அதை மாற்றுவதற்கு வசதியாக இருக்கும் என்பதே இதற்கான காரணம். ஆனால், காலப்போக்கில் வெள்ளை நிறம் என்பது அதிகாரத்தின் குறியீடாக மாறிப்போனது. ஏசி வசதிகள் வந்த பிறகும், வியர்வை இல்லாத சூழலிலும் இந்தத் துண்டு நீடிப்பது நிலப்பிரபுத்துவ மனப்பான்மையின் வெளிப்பாடு எனச் சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
பிரிட்டிஷ் நாட்டினர் நமது நாட்டை விட்டுச் சென்று 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், வாசலில் நிற்கும் பியூன், உயர்மட்ட அதிகாரிகள் பயன்படுத்தும் பச்சை நிற மை வரிசையில் இந்த வெள்ளை துண்டும் ஒரு பழமைவாத அடையாளமாகவே தொடர்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்ற குரல்கள் இப்போது எழத்தொடங்கினாலும், இன்னமும் பல இடங்களில் வெள்ளை துண்டு இருக்கவே செய்கிறது.












Click it and Unblock the Notifications