வெளிநாட்டு பிரபலங்களின் நற்சான்று இந்திய ஜனநாயகத்திற்கு தேவையில்லை.. பாஜக விமர்சனம்
டெல்லி: விவசாயிகளுக்கு ஆதரவாக உலக பிரபலங்கள் குரல் கொடுப்பது நாட்டை சீர்குலைப்பதற்கான முயற்சி என்று பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹான்னா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாயிலாக கருத்துகளை தெரிவித்தனர்.

இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்திய பிரபலங்களும் அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில் போராட்டம் நடத்துவது ஜனநாயகம்.
ஆனால் இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிடுவது தவறானது. வெளிநாட்டினரின் நற்சான்றுகள் இந்திய ஜனநாயகத்திற்கு தேவையில்லை. நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டார்களேயானால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
இந்த வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக இந்திய நாடு ஒற்றுமையாக உள்ளது. வெளிநாட்டினரின் நோக்கம் வெற்றி பெறக் கூடாது என்பதற்கான திறனையும் இந்தியர்கள் கொண்டுள்ளார்கள்.
இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தில் தலையிட வேண்டிய அவசியம் வெளிநாட்டினருக்கு இல்லை. இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் இவ்வாறு செயல்படுகிறார்கள். இந்த சட்டங்களை வைத்துக் கொண்டு வெளிநாட்டு பிரபலங்கள் ஒன்றையும் செய்ய போவதில்லை. ஆனால் இந்தியாவில் ஒரு பிரச்சினையை ஏற்படுத்த அவர்கள் விழைகிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications