"தைரியமாக இருங்கள், வந்துகொண்டே இருக்கிறோம்.." இந்திய மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்த தூதரகம்
டெல்லி: உக்ரைன் மீதான போர் தீவிரமடைந்து வரும் சூழலில், அங்குச் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் குறித்து தூதரகம் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில் 10ஆவது நாளாக இன்றும் போர் தொடர்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
புதினின் இந்த நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த உலக நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. இருப்பினும், அவை பெரியளவில் பலன் அளிப்பதாக இல்லை.

உக்ரைன் போர்
போர் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருவதால், அங்குள்ள வெளிநாட்டினர் பத்திரமாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு இன்னும் கூட சில நூறு இந்திய மாணவர்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரும் பணிகளை வெளியுறவுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள நகரங்களில் வசிக்கும் மாணவர்களால் ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குச் செல்ல முடியாத சூழலே நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மாணவர்கள் அச்சம்
இதனிடையே ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள வடகிழக்கு உக்ரைனின் சுமி நகரில் இருக்கும் இந்திய மாணவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்குச் சிக்கியுள்ளதாகவும் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதால் உயிர் பிழைப்போமா என்ற அச்சம் உள்ளதாக அவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவர்கள் பத்திரமாக வெளியேற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

நம்பிக்கையுடன் இருங்கள்
இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் தனது ட்விட்டரில், "சுமியில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக அழைத்துவரச் சாத்தியமான அனைத்து வழிமுறைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளுடன் பாதுகாப்பாக வெளியேறும் வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியர்கள் அனைவரும் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரும் வரை கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கும். பாதுகாப்பாக இருங்கள். தைரியமாக இருங்கள்" என்று ட்வீட் செய்துள்ளது.

என்ன சவால்
இன்னும் கூட சுமி நகரில் 700 இந்தியர்களும் கார்கிவ் நகரில் 300 இந்தியர்களும் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது தான் இப்போது பெரும் சவாலாக உள்ளது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால், மாணவர்களை எல்லைக்கு அழைத்து வரப் பேருந்துகளை ஏற்பாடு செய்வதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே மாணவர்களை மீட்க கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் தற்காலிக போர்நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Recommended Video

போர் நிறுத்தம்
இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய இரு நகரங்களில் போரைத் தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. வோல்னோவாகா, மரியுபோல் என இந்த இரு நகரங்களும் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ளது. அதேநேரம் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications