பாகிஸ்தானுக்குள்ளேயே புகுந்து தீவிரவாதிகளை கொன்று தள்ளுதாம் ‛ரா..’ இங்கிலாந்து நாளிதழ் செய்தி
புதுடெல்லி: நம் நாட்டுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் தீவிரவாதிகளை பாகிஸ்தானில் வைத்து இந்தியா கொலை செய்வதாக இங்கிலாந்து நாளிதழ் ‛தி கார்டியன்’ பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
இங்கிலாந்தில் பிரபல நாளிதழாக ‛தி கார்டியன்’ உள்ளது. இந்நிலையில் ‛தி கார்டியன்’ நம் நாட்டின் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கனடா, அமெரிக்காவை தொடர்ந்து வெளிநாடுகளில் வைத்து இந்திய உளவு அமைப்பு தீவிரவாதிகளை தீர்த்து கட்டுவதாக ‛தி கார்டியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ‛தி கார்டியன்’ வெளியிட்ட செய்தியில், ‛‛இந்தியாவுக்கு எதிரியாக அல்லது விரோதியாக கருதப்படும் நபர்களை குறிவைத்து கொல்லப்படுகின்றனர். 2019ம் ஆண்டில் இந்தியாவில் புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு பிறகு இதுபோன்று 20 கொலைகளை இந்திய உளவு அமைப்பான ‛RAW’ நடத்தியதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் மற்றும் ரஷ்யாவின் கேஜிபி ஆகியவற்றை இந்தியா உத்வேகமாக எடுத்து கொண்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறது. இதில் சில கொலைகள் குறித்த ஆவணங்களை பாகிஸ்தான் சமர்ப்பித்துள்ளது. அதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய உளவுத்துறையின் ஸ்லீப்பர் செல் மூலம் பாகிஸ்தானில் கொலைகள் நடத்தப்படுகிறது ஆனாலும் கூட அதனை சரிபார்க்க முடியாத சூழல் நிலவுகிறது’’ என குற்றம்சாட்டி இருந்தது.
இந்நிலையில் தான் ‛தி கார்டியன்’ குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில், ‛‛ குறிப்பிட்ட அந்த பத்திரிகையின் குற்றச்சாட்டு தவறானது. அதோடு அது இந்தியாவை எதிர்க்கும் பிரசாரம். வெளிநாடுகளில் வைத்து கொலை செய்வது என்பது இந்திய அரசின் கொள்கை அல்ல என்பதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பலமுறை உறுதியாக கூறிவிட்டார்’’ என பதிலடி கொடுத்துள்ளது.
முன்னதாக கனடாவும், அமெரிக்காவும் இந்தியா மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதனை இந்தியா முற்றிலுமாக மறுத்தது.
அதன்பிறகு வெளிநாட்டு குடியுரிமை பெற்ற மற்றொரு காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை இந்தியா கொல்ல கொல்லும் முயற்சியை தடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இதனையும் இந்தியா மறுத்த நிலையில் தான் இங்கிலாந்தின் ‛தி கார்டியன்’ இத்தகைய குற்றச்சாட்டை சுமர்த்தி உள்ளது. இதனையும் இந்தியா மறுத்துள்ளதோடு, ‛தி கார்டியன்’ பத்திரிகைக்கு இந்திய வெளியுறவுத்துறை பதிலடி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications