பரப்புறது எல்லாம் பொய் செய்தி.. வீடியோ.. 8 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு
டெல்லி: இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பொய் தகவல்களை பரப்பி வந்த 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடியாக முடக்கியுள்ளது.
Recommended Video
இணையதளம், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 2 ஆண்டுகளாக புதிய புதிய யூடியூப் சேனல்கள் முளைத்துள்ளன. யூடியூப் சேனலை எத்தனை பேர் பார்க்கிறார்கள் (வியூஸ்) என்பதை பொறுத்து அதன் உரிமையாளர்களுக்கு யூடியூப் நிறுவனம் பணம் கொடுத்து வருகிறது. இதனால் தங்கள் சேனலை அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காக புதுப்புது முயற்சிகளை அதன் உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பல யூடியூப் சேனல்கள் இந்தியாவின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக தொடர்ந்து வீடியோக்களையும், செய்திகளையும் வெளியிட்டு வந்தன. இதுகுறித்து மத்திய அரசுக்கு அதிக புகார்கள் சென்றன. இதையடுத்து, இதுபோன்ற சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக தகவல் தொழில்நுட்ப விதிகளில் கடந்த ஆண்டு மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது.
அதன் அடிப்படையில், இந்தியாவுக்கு எதிராக பொய் தகவல்களை பரப்பி வந்த சமூக வலைதளங்களை மத்திய அரசு முடக்கியது. கடந்த ஏப்ரல் மாதம் 22 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது. இவற்றில் 4 சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்தன.
இந்நிலையில், இந்திய இறையாண்மைக்கு எதிரான தகவல்களை பரப்பி வந்ததாக 9 யூடியூப் சேனல்களை மத்திய அரசு இன்று முடக்கியுள்ளது. இவற்றில் ஒன்று பாகிஸ்தானைச் சேர்ந்தது ஆகும். 'சப் குச் தேக்கோ', 'லோக்தந்ரா டிவி', 'யு அண்ட் வி டிவி', 'ஏஎம் ரஸ்வி', 'கெளரவ்ஷாலி பவன்', 'சீ டாப் 5 டிஹெச்', 'சர்க்காரி அப்டேட்' ஆகிய 8 இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வந்த 'நியூஸ் கி துனியா' என்ற யூடியூப் சேனலும் முடக்கப்பட்டிருக்கிறது. இந்த சேனல்களுக்கு மொத்தமாக 86 லட்சம் சப்ஸ்கிரைபர்களும் (subscribers), 114 கோடி பார்வையாளர்களும் (views) இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக பொய் தகவல்களை பரப்பி வந்த 8 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ள. உதாரணமாக, இந்திய அரசு சில வழிபாட்டு தலங்களை இடிக்கப் போகிறது; சில பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்க போகிறது, மதம் சார்ந்த போர் பிரகடனத்தை செய்துள்ளது என்பன போன்ற பொய்யான செய்திகளை இந்த யூடியூப் சேனல்கள் பரப்பி வந்துள்ளன. மேலும், காஷ்மீர் குறித்தும், ஆயுதப்படையினர் குறித்தும் தவறான தகவல்களை அவை அளித்து வந்துள்ளன. இதன் காரணமாக அந்த யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications