'ஷாக்..' 2022 காமன்வெல்த் போட்டிகளில்.. இந்திய ஹாக்கி அணி பங்கேற்காது.. என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: பிரிட்டனில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்தும் விதிகள் பாரபட்சமாக இருப்பதால் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய ஹாக்கி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஹாக்கி அணி தற்போது அட்டகாசமான ஃபார்மில் உள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் கூட வெண்கல பதக்கம் வென்று மாபெரும் சாதனை படைத்தது.
இப்படி அட்டகாசமான ஒரு ஃபார்மில் இருப்பதால், அடுத்து வரும் காமன்வெல்த் மற்றும் ஆசியப் போட்டிகளில் இந்தியா அணி தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் இந்திய ஹாக்கி ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை
கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி பிரிட்டன் உட்பட வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஒரு 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில், FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் தனிமைப்படுத்தும் விதிகள் காரணமாகவும் கொரோனா பரவல் காரணமாகவும் FIH ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவதாகப் பிரிட்டன் அணி கடந்த சில நாட்களுக்கு அறிவித்திருந்தது.

காமன்வெல்த் போட்டிகள்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பிரிட்டனில் அடுத்தாண்டு நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா அணி மிகப் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் பிரிட்டனில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்தும் விதிகள் பாரபட்சமாக இருப்பதால் இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி
பிரிட்டன் நாட்டில் AstraZeneca தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. AstraZeneca தடுப்பூசி எடுத்தவர்களுக்குப் பிரிட்டன் நாட்டில் கட்டுப்பாடுகள் இல்லை. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்டு AstraZeneca தடுப்பூசியின் இந்திய வெர்சன் தான் என்றாலும் கூட அதைப் பிரிட்டன் அங்கீகரிக்கவில்லை. அதன்படி பிரிட்டன் நாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள் பயணிக்க 72 மணி நேரத்திற்கு முன் RT PCR பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல பிரிட்டன் நாட்டிற்குச் சென்று ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் தனிமைப்படுத்தும் காலம் முடிந்த பிறகு மீண்டும் RT PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹாக்கி இந்தியா
இது குறித்து ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திரா நிங்கோம்பம் கூறுகையில், "ஆசியன் கேம்ஸ் மற்றும் காமன் வெல்த் கேம்ஸ் அடுத்தடுத்து நடைபெறுகிறது. அதில் ஆசியன் கேம்ஸ் போட்டிகள் தான் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதி போட்டியாகும். எனவே அதற்குத் தான் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வெறும் 32 நாட்கள் இடைவெளியில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் கொரோனா வைரசால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திற்கு இந்திய வீரர்களை அனுப்பும் அபாயத்தை எங்களால் எடுக்க முடியாது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications