மனசாட்சியே இல்லாத பாகிஸ்தான்.. ஆலங்கட்டி மழையில் சிக்கி அவசர நிலையில் இந்திய விமானம்.. சபாஷ் விமானி
டெல்லி: டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சென்ற இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அமிர்தசரசில் நடுவானில் பறந்தபோது, பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கிக் கொண்டது. அப்போது நடுவானில் அந்த விமானம் அவசர நிலையில் சிக்கி தவித்தபோது, நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை விமானி தொடர்பு கொண்டார். ஆனால் அவசரத்திற்கு கூட பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே உறவு சுமூகமாக இல்லை.. பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை கண்டித்து,இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் எல்லையான வாஹா எல்லை மூடப்பட்டது. பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. வர்த்தகத்திற்கும் தடை விதிக்கப்பட்டது.

கெஞ்சிய பாகிஸ்தான்
அத்துடன் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாதிகளின் பயற்சி பள்ளியையும் குறிவைத்து இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் மோதின. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தாக்குபிடிக்க முடியாமல், அமெரிக்காவிடம் தாக்குதலை எப்படியாவது நிறுத்த உதவுமாறு மன்றாடியது. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு பின்னர், தாக்குதல் நிறுத்தப்பட்டது. தற்போது இரு நாட்டு எல்லையில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இண்டிகோ விமானம்
அதேநேரம் இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் தனது நாட்டு வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து நேற்றுமுன்தினம் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று பயணித்தது. அந்த விமானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட 220-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தார்கள்.
ஆலங்கட்டி மழை
இண்டிகோ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கி அந்த விமானம் குலுங்கியதால் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் அந்த விமானத்தை விமானி பத்திரமாக ஸ்ரீநகரில் தரையிறக்கி பயணிகளை காப்பாற்றினார்.
பாகிஸ்தான் மறுப்பு
முன்னதாக நடுவானில் அந்த விமானம் அவசர நிலையில் சிக்கி தவித்தபோது, நிலைமையை சமாளிப்பதற்காக விமானி பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வதற்கு லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அனுமதி கோரியிருக்கிறார். ஆனால் அவசர கால பயன்பாட்டுக்கும் அந்த நாட்டு வான்வெளியை பயன்படுத்த லாகூர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி மறுத்துவிட்டது.
விமானிக்கு பாராட்டு
மனசாட்சியே இல்லாமல் பாகிஸ்தான் அவசரத்திற்கு கூட அனுமதிக்காமல் நடந்து கொண்ட போதிலும், விமானி மோசமான வானிலைக்கு மத்தியில், வழக்கமான வான்வழியிலேயே விமானத்தை பத்திரமாக இயக்கி, ஸ்ரீநகர் சென்று தரையிறக்கியது தற்போது தான் தெரியவந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications