கன்பார்ம் டிக்கெட் இல்லையா? பெங்களூர் உள்பட முக்கிய ஸ்டேஷன்களில்.. ரயில்வே எடுத்த திடீர் முடிவு
டெல்லி: கன்பார்ம் டிக்கெட் வைத்திருப்பவர்களை தவிர மற்ற அனைத்து பயணிகளும் ரயில் வந்த பிறகு தான் ரயில் நிலையங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இதற்காக ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு மையம் அமைக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 60 முக்கிய ரயில் நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
நாட்டில் ரயில் போக்குவரத்து பயணிகளுக்கு இன்றியமையாத சேவையாக இருந்து வருகிறது. பஸ் போக்குவரத்தை காட்டிலும் ரயில் போக்குவரத்தையே பயணிகள் விரும்புகிறார்கள். இந்தியன் ரயில்வேயும் ரயில் போக்குவரத்தை தற்போதைய காலத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பாதுகாப்பு, விபத்துக்களை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் ஒரு சில நேரங்களில் ரயில் விபத்துகள் அரங்கேறுகின்றன. கடந்த மாதம் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பயணிகள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு ஏராளமானோர் அங்கு சென்று வந்தனர். அப்படித்தான், டெல்லி ரயில் நிலையத்தில் உத்தரபிரதேச மகா கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகள் அனைவரும் அங்கு ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க
இது தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடந்து வரும் நிலையில், டெல்லி ரயில் நிலையத்தில் ரயில் வரும் பிளாட்பாரத்தை அறிவித்தபோது நிகழ்ந்த குளறுபடியே இந்த விபத்துக்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்கவும், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் டெல்லியில் நேற்று உயர்நிலைக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும் கலந்துகொண்டார்.
இந்த கூட்டத்தில், பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பிளாட்பார்முக்குள் பயணிகளை அனுமதிப்பதில் கட்டுப்பாடும், மேலும் இதற்காக ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு முழுவதும் 60 ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகின்றன. இதன் விவரம் வருமாறு:-
கன்பார்ம் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே
* கன்பார்ம் டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே இனி நேரடியாக பிளாட்பார்ம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் ரயில் வந்த பிறகே பிளாட்பார்ம் செல்ல அனுமதி அளிக்கப்படும்.
* இதற்காக நாடு முழுவதும் உள்ள முக்கியமான 60 ரயில் நிலையங்களுக்கு வெளியே காத்திருப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
* ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில் நிலையங்களில் உள்ள நடைமேம்பாலத்தை 12 அகலத்திலும், 6 மீட்டர் அகலங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* ரயில் நிலையங்களில் போர்க்கால அறைகள் அதாவது வார் ரூம்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* கூட்ட நெரிசல் ஏற்படும் சமயங்களில், அனைத்து துறை உயர் அதிகாரிகள் கூட்ட நெரிசலை குறைப்பது தொடர்பாக போர்க்கால அறைகளில் நேரடி ஆலோசனையில் ஈடுபட முடியும்.
பெங்களூர் உள்பட 60 ரயில் நிலையங்கள்
* ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்த, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* ரயில் நிலையங்களின் நிலைய அதிகாரிகளுக்கு நிதி அதிகாரம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் விற்பனையை கட்டுப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
* பெங்களூர், புதுடெல்லி, ஆனந்த் விஹார், வாரணாசி, அயோத்யா மற்றும் பாட்னா உள்பட நாடு முழுவதும் 60 முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.












Click it and Unblock the Notifications