ரஷ்யாவுக்கு ‛குட்பை' கூறிய இந்தியா.. கச்சா எண்ணெய் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. டிரம்ப்புக்கு வெற்றி
டெல்லி: ரஷ்யாவின் மிகப்பெரிய 2 கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது கடந்த வாரம் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை சலுகை விலையில் நம் நாடு வாங்கி வரும் நிலையில் இது சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் இருந்து புதிய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பான ஒப்பந்தங்கள் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது டிரம்புக்கு கிடைத்த பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் தற்போது வரை சாத்தியமாகவில்லை. ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இருப்பினும் நம் நாடும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி பயன்படுத்தி வருகிறது. இதனால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே தான் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியா உக்ரைன் போரை ஊக்குவிக்கிறது. இந்தியா உடனடியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் விற்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
ஆனால் நம் நாடு கேட்கவில்லை. இதற்கிடையே தான் ரஷ்யாவின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் பொருளாதார தடைகளை விதித்தார். இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன் உள்பட ஐரோப்பிய ஒன்றியங்களும் பொருளாதார தடைகளை அதிகரித்தன.
இதனை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் அடுத்தக்கட்டமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனங்களை டிரம்ப் குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீத வரி போட்டார். இதன் அடுத்தக்கட்டமாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நிறுவனங்களை குறிவைத்தால் மத்திய அரசு நிறுவனங்கள், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும். ஏனென்றால் ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு அதிகப்படியான கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. நம் நாட்டின் தேவையில் 38 சதவீதத்தை ரஷ்யாவின் கச்சா எண்ணெய்கள் தான் பூர்த்தி செய்கிறது.
இதனால் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் தற்போது பொருளாதார தடையை தொடர்ந்து தான் தற்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான புதிய ஒப்பந்தத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளது. ரஷ்யாவின் 2 கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஏதேனும் நம் நாட்டு நிறுவனத்துக்கு ஏதேனும் சிக்கல் வருமா? என்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் தெளிவுப்படுத்தவில்லை.
இநு்நிலையில் தான் தற்போது ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க மாற்று வழிகள் கையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கச்சா எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்ய ஸ்பாட் மார்க்கெட் (Spot Market) முறை கையாளப்படுகிறது. அதன்படி அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. அதேபோல் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ஸ்பாட் கொள்முதல் முறையை தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக கச்சா எண்ணெய் கொள்முதல் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛தற்போது ரஷ்யா நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பண பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது. எனவே கச்சா எண்ணெய் கொள்முதலில் மாற்று திட்டத்தை எடுக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது''என்றார். அதேவேளையில் மற்றொரு சுத்திகரிப்பு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛ இடைத்தரகர்கள் மூலம் கச்சா எண்ணெய் பெற முடியுமா? என்று பார்க்க வேண்டும். அரசு மற்றும் கச்சா எண்ணெய் சப்ளையர்களிடம் இருந்து எங்களுக்கு தெளிவு கிடைக்கும் வரை நாங்கள் புதிய ஆர்டர்களை முன்னெடுக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளார்.
இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவை மொத்தமாக முடக்கி, உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பது தான் டிரம்பின் குறிக்கோளாக உள்ளது. இதனால் தான் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று அவர் கூறினார். ஆனால் நம் நாடு கேட்கவில்லை. அமெரிக்காவை விட நம் நாட்டுக்கு ரஷ்யா தான் நட்பு நாடு.
இதனால் ரஷ்யாவை நம் நாடு கைவிடவில்லை. டிரம்பின் மிரட்டலுக்கு நடுவே கூட நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை தொடர்ந்து வாங்கியது. இதனால் கோபமான டிரம்ப் நம் நாட்டுக்கு 25 சதவீத வரிகளை விதித்தார். இப்போது நம் நாடு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விஷயத்தில் புதிய ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது இதனால் இது டிரம்புக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், சர்வதேச எரிசக்தி அமைப்பின் டேட்டாப்படி பார்த்தால், 2025ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் நம் நாடு ஒரு நாளைக்கு சுமார் 1.9 மில்லியன் பேரல்கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்தது. இது ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதமாகும். ஆனால் ரஷ்யாவின் தள்ளுபடி தளர்வு மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தம் உள்ளிட்டவற்றால் தற்போது சிறியதளவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. இதற்கு பதிலாக மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது அதிகரித்துள்ளது. தற்போது புதிய ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இது டிரம்பிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications