"ரூ.290 கோடி.." இந்தியாவின் மிக பெரிய வருமானவரித்துறை ரெய்டு.. 3 மாநிலங்களில் நடந்த மெகா ஆப்ரேஷன்
டெல்லி: ஒடிசா காங்கிரஸ் எம்பி ஒருவருக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 290 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பீரோவில் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கத்தில் உள்ள மதுபான ஆலை ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முதல் மூன்று மாநிலங்களில் வருமான வரித்துறையினர் இந்த ரெய்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த ரெய்டு இன்னும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இந்த ரெய்டு தொடர்பாக சில பரபர தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் ஒடிசாவில் ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளத்திற்கும் தொடர்பு இருப்பதாக பாஜக சாடியுள்ளது.
ரூ.290 கோடி பறிமுதல்: இதுவரை இந்த சோதனையில் ₹ 290 கோடி கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச ரொக்கம் இதுவாகும்.
பணம் எண்ணும் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் அவை இன்னும் முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இன்னும் பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதால் கைப்பற்றப்பட்ட தொகையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கைப்பற்றப்பட்ட பணம் கட்டுக்கட்டாக பீரோக்களில் இருக்கும் படங்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சோதனை முடியவில்லை: மூன்று இடங்களில் உள்ள ஏழு அறைகள் மற்றும் ஒன்பது லாக்கர்களில் சோதனை நடத்தப்பட உள்ளதாக ஐடி துறையினர் தெரிவித்தனர். அலமாரிகள் மற்றும் பல மர பொருட்களில் பணம் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நகைகள் இருக்கும் இடங்கள் குறித்தும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அங்கேயும் சோதனை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றும் பௌத் டிஸ்டில்லரி மற்றும் அதனுடன் தொடர்புடைய அலுவலகங்களில் சோதனைகள் தொடர்ந்து வருகிறது. ஜார்க்கண்ட் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி தீரஜ் குமார் சாஹு என்பவரின் மகன் ரித்தேஷ் சாஹு என்பவருக்கு இந்த மதுபான ஆலை சொந்தமானதாகும். மேலும், தீரஜ் குமார் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்தும் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடி: முன்னதாக நேற்றைய தினம் இந்த ரெய்டை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், "நாட்டு மக்கள் குவிந்து கிடக்கும் நோட்டுகளை பார்த்துவிட்டு தங்கள் தலைவர்களின் "நேர்மையை" புரிந்து கொள்ளட்டும். பொதுமக்களிடம் இருந்து என்ன கொள்ளையடிக்கப்பட்டாலும், ஒவ்வொரு பைசாவையும் திரும்பக் கொடுக்க வேண்டும், இது தான் மோடியின் உத்தரவாதம்" என்று பதிவிட்டுள்ளார்.
மாநில அரசு: ஒடிசா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் இந்த விகாரம் குறித்து விமர்சித்திருந்தார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணையைக் கோரிய அம்மாநில பாஜகவினர், இந்த விவகாரத்தில் ஒடிசாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஜு ஜனதா தளத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஒடிசா பெண் அமைச்சர் இப்போது ரெய்டு நடக்கும் மதுபான ஆலை உரிமையாளர் ஒருவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற படத்தையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
மேலும், மாநில அரசு மற்றும் உள்ளூர் தலைவர்களின் ஆதரவு இல்லாமல் வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்பே இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications