‛ஹைட்ரஜன் ரயில்’ தெரியுமா? நாட்டில் முதல் முறையாக அறிமுகப்படுத்தும் மத்திய அரசு.. ஸ்பெஷலே இதுதான்!
டெல்லி: சீனா, பிரான்ஸ் உள்பட பல வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ஹைட்ரஜன் ரயில் முதல் முறையாக நம் நாட்டில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் அடுத்த ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அதற்கான சோதனை ஓட்டம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
ரயில்வே துறையில் மத்திய அரசு தொடர்ந்து பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி ‛வந்தே பாரத்' ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் மத்திய அரசு ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த ஹைட்ரஜன் ரயில் சேவைக்கான ஏற்பாடுகள், பணிகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் தற்போது ஹைட்ரஜன் ரயிலின் சோதனை ஓட்டம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறையும். இதனால் இந்தியாவும் ஹைட்ரஜன் ரயிலை உருவாக்க திட்டமிட்டது. இதையடுத்து ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியை சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலை ஒருங்கிணைக்க தொடங்கியது.
மேலும் வடக்கு ரயில்வேயின் டெல்லி பிராந்தியத்தில் ஹரியானா மாநிலத்தில் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. அதாவது ஹரியானாவில் உள்ள ஜிந்த் - சோனிபட் ஆகிய நகரங்கள் இடையே இடையே 89 கிலோமீட்டர் தொலைவுக்கு முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது. தற்போது நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயிலுக்கான சோதனை ஓட்டம் என்பது நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்டம் என்பது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஹைட்ரஜன் ரயில் திட்டம் ரூ.2800 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. அதேபோல் ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு மையங்கள் ரூ.600 கோடியில் உருவாக்கப்பட உள்ளது. முதல் ஹைட்ரஜன் ரயிலுக்கு ஜிந்த் நகரில் உள்ள 1 மெகாவாட் பாலிமர் எலக்ட்ரேலைட் மெம்பரேன் எலக்ட்ரோலைசர் ரயிலுக்கு தேவையான ஹைட்ரஜனை வழங்கும். இங்கு 3,000 கிலோ வரை ஹைட்ரஜனனை சேமித்து வைக்க முடியும்.
அதன்பிறகு ஹைட்ரஜன் ரயில் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே 35 ஹெரிடேஜ் ரயில்களை உருவாக்கும். அதாவது பாரம்பரியமான இடங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படும். ஹைட்ரஜன் ரயில் என்பது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது. இந்திய ரயில்வேயை பொறுத்தவரை 2030ம் ஆண்டக்குள் ‛ஜீரோ கார்பன்' வெளியீடு என்ற இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு ஹைட்ரஜன் ரயில் பெரும் பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications