"உடனே ஹசீனாவை நாடு கடத்துங்க.." வங்கதேசம் சொன்ன வார்த்தை.. சட்டென இந்தியா கொடுத்த சரியான பதில்
டெல்லி: வங்கதேச வன்முறை தொடர்பான வழக்கில் அந்நாட்டின் மாஜி பிரதமர் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிலையில், இந்தியாவில் வசித்து வரும் ஹசீனாவை நாடுகடத்த வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழலில் தீர்ப்பு வந்த பிறகு அது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகமும் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். மேலும், அந்நாட்டின் பிரதமராக இருந்த ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அப்போது அந்தக் காலகட்டத்தில் நடந்த வன்முறைக்கு ஹசீனா தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

வங்கதேசம்
இது தொடர்பான வழக்கை வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்தது. அதில் ஹசீனா மீதே தவறாக இருப்பதாகச் சொல்லி அவருக்கு மரணத் தண்டை விதித்தது. இதற்கிடையே இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சில கருத்துகளைக் கூறியுள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை நோட் செய்துள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.. மேலும், வங்கதேச மக்களின் நலன்களுக்குத் தொடர்ந்து இந்தியா கடமைப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம்
அதில் மேலும், "வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயகம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை உட்பட மக்களின் நலன்களுக்கு ஒரு நெருங்கிய அண்டை நாடாக இந்தியா தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்" என்று மட்டும் தெரிவித்துள்ளது. அதேநேரம் மரணத் தண்டையைத் தொடர்ந்து ஹசீனா நாடுகடத்தப்படுவாரா என்பது குறித்த தகவல்கள் அதில் இல்லை.
வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் ஷேக் ஹசீனாவுக்கு பங்கு இருப்பதாகச் சொல்லி அவருக்கு மரண தண்டனையை வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விதித்தது. மேலும், அவரை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்தது.
வங்கதேசம் சொல்வது என்ன
கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரங்களுக்குப் பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருக்கிறார். இதற்கிடையே இருதரப்பு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி, ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஹசீனாவை மனிதக் குலத்திற்கு எதிரான குற்றம் செய்தவர் என்றும் வங்கதேசம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஷேக் ஹசீனாவிற்கு அடைக்கலம் கொடுக்கும் எந்த நாடும் மிகவும் நட்பற்ற செயலைச் செய்வதாகவும் நீதிக்கு எதிராகச் செயல்படுவதாகவும் கூட காட்டமான வார்த்தைகளை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் பயன்படுத்தியிருந்தது.
ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் சொல்வது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த 2024 டிசம்பரிலேயே ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும், இந்தியா ஹசீனாவை வங்கதேசத்திற்கு ஒப்படைக்கவில்லை. இந்தச் சூழலில் தான் இப்போது மரண தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், இரு தரப்பு ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி ஹசீனாவை ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.
ஒப்பந்தம் சொல்வது என்ன
கடந்த 2013இல் இந்தியா வங்கதேசம் நாடுகளுக்கு இடையே நாடுகடத்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், நாடுகடத்த விடுக்கப்பட்ட கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கருதப்பட்டால் அதை நிராகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதைக் காரணமாகச் சொல்லியே இந்தியா நாடுகடத்தல் கோரிக்கையை மறுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications