இறைச்சி அதிகம் சாப்பிடும் மாநிலம் எது.. டாப்பில் நீங்க எதிர்பார்க்காத மாநிலம்! அப்போ தமிழகம் எங்கே?
டெல்லி: உலகிலேயே அதிக சைவ உணவுகளைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதேநேரம் அசைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கையும் இங்கே கணிசமாக அதிகமாகவே இருக்கிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நமது நாட்டில் சுமார் 85% பேர் அசைவம் சாப்பிடுவது தெரிய வந்துள்ளது. அதில் எந்த மாநிலம் டாப்பில் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகிலேயே இப்போது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றும் நிலையில், கணிசமான அளவுக்கு மக்கள் சைவ உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள்.

இந்தியாவில் உணவுகள்:
இதன் காரணமாக உலகிலேயே சைவ உணவு அதிகம் சாப்பிடும் மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. அதாவது நமது நாட்டில் சுமார் 25 கோடி பேர் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவோராக இருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்தளவுக்குச் சைவ உணவு முறையைப் பின்பற்றுவோர் இல்லை.
அதேநேரம் நமது நாட்டிலும் கூட ஒப்பீட்டளவில் பார்த்தோம் என்றால் அசைவ உணவு முறையை பின்பற்றோரின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. அதாவது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 85% அதிகமானோர் அசைவம் சாப்பிடுவோராகவே உள்ளனர். இவர்கள் அனைவருமே ஆண்டுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு அசைவ உணவைச் சாப்பிட்டு வருகிறார்கள்.
அசைவ உணவுகள் எங்கே அதிகம்:
இதற்கிடையே சமீபத்தில் வெளியான ஆய்வில் எந்த மாநிலத்தில் எந்தளவுக்கு அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறார்கள் என்பது விளக்கப்பட்டு இருந்தது. அதன்படி நாட்டிலேயே அதிகளவில் இறைச்சி என்பது வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் தான் சாப்பிடப்படுகிறது. அங்கு மக்கள்தொகையில் சுமார் 99.8 சதவீதம் பேர் அசைவ உணவு உண்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாகாலாந்துக்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாகாலாந்துக்கும் மேற்கு வங்கத்திற்கும் பெரியளவில் வேறுபாடு இல்லை. மேற்கு வங்க மக்கள் தொகையில் சுமார் 99.3 சதவீத மக்கள் அசைவ உணவைச் சாப்பிடுவோராக இருக்கிறார்கள். இந்த இரண்டுமே நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் மாநிலங்களாகும்.
தமிழ்நாடு எங்கே:
இந்த இரு மாநிலங்களைத் தொடர்ந்து தென் மாநிலமான கேரளா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கேரள மக்கள்தொகையில் சுமார் 99.1 சதவீதம் பேர் அசைவ உணவுகளைச் சாப்பிடுவோராக உள்ளனர். அடுத்து லிஸ்டில் 4வது இடத்தில் வரும் மாநிலமும் தென் மாநிலம் தான். அதுதான் ஆந்திரா.. இங்கு மக்கள் தொகையில் 98.25 சதவீதம் பேர் இறைச்சி உண்போராக உள்ளனர்..
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. நமது நாட்டிலும் சுமார் 97% மக்கள் எதாவது ஒரு வகையில் அசைவம் சாப்பிடுவோராகவே உள்ளனர். தமிழ்நாட்டைத் தொடர்ந்து பீகாரும் அதிக அசைவ உணவைச் சாப்பிடுவோர் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து இருக்கிறது.
பிராந்திய வாரியாக:
அதேபோல மற்றொரு ஆய்வில் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியா பகுதிகளில் தான் அசைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மாநிலங்களில் ஒப்பீட்டளவில் அசைவ உணவு உண்போர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கலாச்சாரம் ரீதியாக தெற்கு மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் அசைவம் முக்கிய உணவாக இருப்பதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications