சென்னை உள்பட நாடு முழுதும் முடங்கிய விமான சேவை.. எப்போதும் சரியாகும்? டிஜிசிஏ தந்த விளக்கம்
சென்னை: சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவைகள் முடங்கி உள்ளது. பைலட்டுகள் பற்றாக்குறையால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பிற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளன. இந்நிலையில் தான் இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் விமானிகளின் சங்கங்களுக்கு கடிதம் எழுதி உள்ளதோடு, விமான சேவை எப்போது இயல்பு நிலைக்கு வரும்? என்பது பற்றி முக்கிய விளக்கத்தை தந்துள்ளது.
நம் நாட்டில் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்த நிறுவனம் என்பது உள்நாட்டு சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இண்டிகோ விமான சேவைகள் கடந்த 1ம் தேதி முதல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகத்தின் பணி கட்டுப்பாட்டு விதிமுறைகளை செயல்படுத்தியது தான் இதற்கு காரணம். அதாவது விமானிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு தங்களின் பணி நேரத்தை விட கூடுதலாக பணி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் அதிகப்படியான விமானிகள், ஊழியர்கள் தேவையாக உள்ளது.
இதனை இண்டிகோ நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை. இதனால் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவதும், தாமதமாக புறப்பட்டு செல்வதும் தொடர்ந்து வருகிறது. இன்றைய தினம் 500 இண்டிகோ விமானங்களின் சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 400 விமானங்கள் ரத்தாகி உள்ள நிலையில் 100க்கும் அதிகமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிைலையில் விமான சேவை பாதிப்பை இந்திய விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் (Directorate General of Civil Aviation or DGCA) உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதுதொடர்பாக அந்த இயக்குநரகம் அனைத்து விமானிகளின் சங்கத்துக்கும் கடிதம் எழுதி உள்ளது.
அதில் ‛‛இண்டிகோ நிறுவனத்தால் நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பைலட்டுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. அதோடு விடுமுறை நாட்கள், திருமணம் போன்ற முகூர்த்த தினங்களும் வருகின்றன. இதனால் விமானங்களை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்துஅதிகரிக்கும்.
இப்படியான சூழலில் தேவையற்ற விமானம் ரத்து, தாமதம் உள்ளிட்டவை இருக்க கூடாது. விமான சேவை சீராக இருக்க வேண்டும். இதனால் பைலட் மற்றும் பைலட் சங்கங்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும் இண்டிகோ விமான நிறுவனத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று மட்டும் 500க்கும் அதிகமான விமானங்கள் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சனையை இண்டிகோவால் விரைவில் சரிசெய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்கள் இண்டிகோ விமான சேவை பாதிப்பில் தான் இருக்கும். அதுவரை மக்கள் சிரமத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் நாடு முழுவதும் 10ம் தேதிக்கு பிறகு தான் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு வரலாம் என இண்டிகோ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் விமான நிலையம் செல்வதற்கு முன்பாக https://goindigo.in/check-flight-status.html என்ற இணையதளத்தில் விமானங்கள் இயங்குகிறதா? இல்லையா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications