ஹனிமூனுக்காக கோவா செல்ல இருந்தேன்.. விமானிக்கு பளார் விட்ட பயணி போலீசிடம் சொன்ன காரணத்தை பாருங்க
டெல்லி: இண்டிகோ விமானத்தில் விமானியை பயணி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவாவிற்கு தேனிலவு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், விமானம் தாமதம் ஆனதால் மிகவும் கோபம் அடைந்து தாக்கியதாவும் போலீசாரிடம் அந்த பயணி சொல்லியிருக்கிறார்.
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரைக்கும் குறைந்து காணப்படுகிறது. காலை வேளையில் கடுமையான பனிமூட்டமும் நிலவுவதால் குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு தென்படுகிறது. இதனால், ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலை வழி பயணத்திலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் செல்கின்றன. அடர் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே இதுதான் நிலைமையாக உள்ளது. இந்த நிலையில் தான், நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் இருந்து கோவா நோக்கி செல்ல இருந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-2175 விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது.
விமானியை தாக்கியது ஏன்: பல மணி நேரமாக விமானம் தாமதமானதால் பயணிகள் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர். அதாவது காலை நேரத்தில் புறப்படுவதாக இருந்த விமானம் மாலை தான் புறப்பட்டு சென்றது. விமானம் தாமதம் ஆனது குறித்து விமானி அனுப் குமார் என்பவர் பயணிகளுக்கு அறிவித்துக் கொண்டு இருந்தார். அப்போது விமானத்தின் கடைசி இருக்கையில் இருந்து பாய்ந்து வந்த சஹில் கதாரியா (வயது 28) என்ற பயணி, விமானியை சரமாரியாக தாக்கினார்.
இந்தக் காட்சிகளை விமானத்தில் இருந்த சில பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர். விமானியை பயணி தாக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஹில் கதாரியாவை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர். இந்த நிலையில், விமானியை தாக்கியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணையின் போது சஹில் கதாரியா புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
விமானம் தாமதம் ஆனதால்: இது குறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:- விமானியை தாக்கிய கத்தாரியா டெல்லியில் பொம்மைக் கடைகள் வைத்துள்ளார். கோவாவிற்கு தேனிலவு செல்ல திட்டமிட்டு இருந்தததாகவும் அதனால் தான் விமானம் தாமதம் ஆனதால் மிகவும் கோபம் அடைந்ததாக கத்தாரியா போலீசாரிடம் சொல்லியிருக்கிறார். காலை 7.30 மணிக்கு புறப்பட இருந்த விமானம் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டதாகவும் இப்படி மிகவும் தாமதமானதால்தான் கோபம் அடைந்தேன் என்று சொல்லியிருக்கிறார்.
எனினும், கத்தாரியாவின் விசாரணையில் கூறிய இந்த தகவலை ஏற்கவில்லை. ஏனெனில் கத்தாரியாவுக்கு திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகிவிட்டதால், கடுமையான நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இப்படி சொல்லியிருக்கலாம் என போலீசார் கருதியுள்ளனர். எனினும் நேற்று மாலை கைது செய்யப்பட்ட ஷகில் கதாரியா சிறிது நேரத்திலெயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications