"ஏகப்பட்ட தவறுகள்.." இண்டிகோவுக்கு ரூ.22 கோடி அபராதம் விதிப்பு.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
டெல்லி: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 22.20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.. கடந்தாண்டு டிசம்பர் மாதம் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட செயல்பாட்டுக் குறைபாடுகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த நிர்வாகிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கியமான விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய விமானச் சந்தையில் இண்டிகோ ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எத்தனையோ விமான நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் திணறும் நிலையில், இண்டிகோ மட்டும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் டிசம்பர் மாதம் மிக மோசமான சம்பவம் நடந்தது.

டிசிஜிஏ எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்திருந்த புதிய விதிகள் அமலுக்கு வந்தபோது, இண்டிகோ அதற்கேற்பத் திட்டமிடவில்லை. இதன் காரணமாக நாடு முழுக்க பல ஆயிரம் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. டிசம்பர் 3 முதல் 5 வரையிலான நாட்களில் இண்டிகோ 2,507 விமானங்களை ரத்து செய்ததுடன், 1,852 விமானங்களில் தாமதம் ஏற்பட்டன. இதனால் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை குறைபாடுகள் இருப்பதை டிசிஜிஏ அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து இண்டிகோ நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.22.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த நிர்வாகிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிசிஜிஏ உத்தரவுகள் தங்களுக்கு வந்துள்ளதை இண்டிகோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், உத்தரவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இதுபோன்ற சிக்கல் மீண்டும் வராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications