கொரோனா காலத்திலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற இண்டிகோ... ரகசியத்தை உடைக்கும் சிஇஓ
டெல்லி: கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பை மிகவும் திறமையாகக் கையாண்டுள்ள இண்டிகோ நிறுவனம், விரைவில் சர்வதேச விமானச் சேவையில் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட துறையாக விமான துறை உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கடந்த மார்ச் இறுதி வாரம் முதல் மே வரையிலான காலகட்டத்தில் விமானச் சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டன.
மே மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவையை படிப்படியாகத் தொடங்க அனுமதியளிக்கப்பட்டது. கொரோனா காலத்திலும் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ சிறப்பாகச் செயல்பட்டு நஷ்டத்தைப் பெரியளவில் குறைத்தது.

எங்கள் வளர்ச்சி சீராகவுள்ளது
இந்நிலையில் புளும்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இண்டிகோ நிறுவனம் சீராக மீண்டு வருவதாக அந்நிறுவனத்தின் சிஇஓ ரோனோ தத்தா தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், "கொரோனா காரணமாக ஏற்பட்ட மோசமான நிலைமை தற்போது இல்லை. நாங்கள் மிகவும் நன்றாக, குறிப்பாக உள்நாட்டு விமான போக்குவரத்தில் மீண்டு வருகிறோம்.

சர்வதேச விமான போக்குவரத்து
தனிமைப்படுத்தும் விதிமுறைகள் மற்றும் பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரோனா ஆகியவை காரணமாகச் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் பழையபடி திரும்ப அதிக காலம் ஆகும். ஆனால் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் சர்வதேச விமான போக்குவரத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்புகிறேன்" என்றார். பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா காரணமாக இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

மீண்டும் ஊழியர்களை பணிக்கு எடுக்கவுள்ளோம்
இண்டிகோ நிறுவனம் புதிதாக ஏர்பஸ் விமானங்களை வாங்க ஆர்டர் அளித்திருந்தது. அதேநேரம் கொரோனா காரணமாக சுமார் 10% ஊழியர்களைப் பணி நீக்கமும் செய்திருந்தது. இது குறித்து அவர் கூறுகையில், "சர்வதேச விமான போக்குவரத்தில் எங்கள் வளர்ச்சிக்கு நிறைய இடம் உள்ளது. இதில் எங்கள் பல திட்டங்கள் உள்ளன. வரவிருக்கும் புதிய விமானங்கள் இதில் எங்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், நிலைமை சீராகவுள்ளதால் அடுத்த மூன்று மாதங்களில் ஊழியர்களை மீண்டும் பணிக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

உயரும் இண்டிகோ பங்குகள்
சர்வதேச அளவில் பல விமான நிறுவனங்களும் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. இருப்பினும் இண்டிகோ நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்துப் பல முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்நிறுவனத்தில் முதலீடு செய்துவருகின்றனர். இந்தாண்டு ஆசியாவில் இருக்கும் விமான நிறுவனங்களில் பங்குகளின் மதிப்பு 21% சரிந்துள்ளது. அதேபோல சர்வதேச விமான நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு 29% சரிந்துள்ளது. ஆனால், இண்டிகோ நிறுவனத்தின் பங்குகள் மட்டும் 22% அதிகரித்துள்ளது.

விமானங்கள் போதாது
அதிகளவில் விமானங்களை இண்டிகோ ஆர்டர் கொடுத்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ரோனோ தத்தா, "இந்தியாவில் நடுத்தர வர்க்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அதிகளவில் மக்கள் விமானங்களில் பயணிக்கத் தொடங்குவார்கள். அதைக் கணக்கில் வைத்துப் பார்க்கும்போது நாங்கள் போதுமான விமானங்களை ஆர்டர் செய்யவில்லை என்றே கூறலாம்" என்றார்.

நிதி திரட்டும் திட்டம் இல்லை
இண்டிகோ நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காயிரம் கோடி ரூபாய் முதலீட்டைத் திரட்டியது. வரும் காலத்தில் சர்வதேச போக்குவரத்தை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இண்டிகோ ஈடுபடுமா என்று கேட்ட கேள்விக்கு, "இல்லை. மீண்டும் நிதி திரட்டும் திட்டம் எதுவும் எங்களிடம் இப்போது இல்லை. செலவுகளைக் குறைத்துவிட்டு, செயல்பாடுகளை அதிகரிப்பதிலேயே நாங்கள் இப்போது கவனத்தைச் செலுத்துகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications