எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கெஜ்ரிவால் அரசு சலுகை மழை.. புதிய வாகன கொள்கைக்கு பல தரப்பில் வரவேற்பு
டெல்லி அரசு அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் வாகன கொள்கைக்கு, பல்வேறு வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் துறை சார்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று எலக்ட்ரிக் வாகன கொள்கை வெளியிட்டார். இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு, பதிவு கட்டணம், சாலை வரி உள்ளிட்டவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

அது மட்டும் கிடையாது. வாகனங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையும் கிடைக்கும். இதனால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவுக்கு வாங்குவார்கள். பெட்ரோலிய எரிபொருட்கள் கொண்டு இயங்கக் கூடிய வாகனங்களை வாங்குவது குறைந்து, டெல்லியில் மாசு பிரச்சனை குறையும் என்பது ஆம் ஆத்மி அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டெல்லி அரசின் எலக்ட்ரிக் வாகன கொள்கைக்கு, பல்வேறு சுற்றுச்சூழல் நிபுணர்களும், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்களும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் நவீன் முன்ஞால், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் சார்பில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, டெல்லி அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையை வரவேற்கிறோம். மாசிலிருந்து தேசத்தை காப்பாற்றுவதற்கான முக்கியமான முயற்சி இதுவாகும், என்று தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு டுவிட்டரில் கூறுகையில், டெல்லி அரசுக்கு எனது பாராட்டுக்களும் நன்றியும், நீண்ட கால எதிர்கால மின்சார வாகனக் கொள்கையை டெல்லிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.
எலக்ட்ரிக் வாகன கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்ய அரசுடன் ஒத்துழைப்பு அளிப்பதாக இவர்கள் உறுதியளித்தனர்.












Click it and Unblock the Notifications