Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பற்ற வைத்த பாஜக.. பதவி விலகும் அரவிந்த் கெஜ்ரிவால்! அடுத்த டெல்லி முதல்வர் யார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுபான கொள்கை முறைகேட்டில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இப்படி இருக்கையில், அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கூறியிருக்கிறார். எனவே, அடுத்த முதல்வர் யார் என்கிற எதிர்பார்ப்பு மேலெழுந்திருக்கிறது.

பற்ற வைத்த பாஜக: கடந்த 2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை எழுப்பியதே பாஜகதான். எனவே புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது. இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.

arvind kejriwal delhi chief minister

சிறை சென்ற கெஜ்ரிவால்: விசாரணையை அடுத்து கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது. இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார்.

முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன்: இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். ஜாமீனை தொடர்ந்து கெஜ்ரிவால் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. உயர்நீதிமன்றமும் வழக்கை தன் பங்குக்கு முதலிலிருந்து விசாரித்து, ஒரு வழியாக ஜாமீன் வழங்கியது.

குறுக்கே வந்த சிபிஐ: ஆனால், இங்குதான் ட்விஸ்ட். அதாவது அமலாக்கத்துறை போனால் என்ன? அதான் நாங்க இருக்கிறோமே என்று சிபிஐ சிறையில் வைத்தே கெஜ்ரிவாலை கைது செய்தது. அதன் பின்னர் மீண்டும் முதலில் இருந்து ஜாமீன் கோரி ஒவ்வொரு நீதிமன்றமாக ஏறி இறங்கிய கெஜ்ரிவால் இறுதியில் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

வழக்கின் போக்கை பார்த்த நீதிமன்றம், சிபிஐ-ஐ சரமாரியாக சாடி, கெஜ்ரிவாலுக்கு செப்.13ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து வெளியே வந்த கெஜ்ரிவால் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ராஜினாமா: இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் இரண்டு வெளியானது. ஒன்று, டெல்லி சட்டப்பேரவை தேர்தலை நவம்பர் மாதத்தில் நடத்தப்பட வேண்டும். இந்த மாதத்தில் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது, கெஜ்ரிவாலின் ராஜினாமா. பாஜக தங்களை ஊழல்வாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளதாகவும், இதனை மக்களின் ஆதரவோடு கிழித்துவிட்டு தான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்வதாகவும், அதுவரை முதல்வர் பதவியில் தொடரப்போவதில்லை எனவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

யார் அடுத்த முதல்வர்?: எல்லாம் ஓகே, நவம்பரில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வந்தால் கூட, இடைப்பட்ட 2 மாதங்களுக்கு யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த முதல்வர் லிஸ்ட்டில் முன்னணியில் உள்ளவர்கள் சிலரின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

சௌரப் பரத்வாஜ்: இவர் டெல்லி ஆம் ஆத்மி அரசின் அமைச்சராக இருக்கிறார். விஜிலென்ஸ் மற்றும் சுகாதாரத்துறையை இவர் நிர்வகித்து வருகிறார். கட்சியின் தலைமை மட்டத்தில் இவர் மீது நல்ல மதிப்பு இருக்கிறது. கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தவிர ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். கெஜ்ரிவாலும், சிசோடியாவும் கைது செய்யப்பட்ட பின்னர், டெல்லி அரசாங்கத்தை நடத்துவதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். எனவே, அடுத்த முதல்வர் லிஸ்ட்டில் இவரது பெயரும் இருக்கிறது.

ராகவ் சதா: இவர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். தவிர, கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ராஜ்யசபாவில் கட்சியின் முழக்கங்களை சிறப்பாக முன்வைத்து வருகிறார். எனவே தலைமைக்கு இவர் மீதும் ஒரு கண் இருக்கிறது. 35 வயதான இவர் நாட்டின் மிக இளம் அரசியல்வாதியாக இருக்கிறார். இவரது பெயரும் லிஸ்ட்டில் இருக்கிறது.

கைலாஷ் கெஹ்லோட்: இவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞராவார். நீதி துறையில் இவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என இரண்டிலும் பயிற்சி பெற்றவர். டெல்லி அரசின் அமைச்சரவையில் உள்ள இவர், தற்போது போக்குவரத்து மற்றும் நிதித்துறை கவனித்து வருகிறார். ஆம் ஆத்மி தொடங்கியது முதல் கட்சியில் முன்னணி தலைமையாக இருந்து வருகிறார். இவரது பெயரும் லிஸ்ட்டில் இருக்கிறது.

சஞ்சய் சிங்: 52 வயதான இவர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும் இருக்கிறார். அதிகாரத்தை பொறுத்த அளவில், கடந்த 2018ம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்பியாக இருந்து வருகிறார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்திருக்கிறார். இருப்பினும் துடிப்பான அரசியல் தலைமை என்பதால் இவர் மீதும் கட்சி ஒரு கண் வைத்திருக்கிறது.

அதிஷி: இவர்கள் நால்வரை தவிர முக்கியமான நபராக அதிஷி இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி தலைமை செயலகத்தில் தேசியக்கொடியை ஏற்றும் பொறுப்பை அதிஷி வசம் கட்சி தலைமை ஒப்படைத்திருந்தது. இதன் மூலம் அதிஷி எந்த அளவுக்கு முக்கியமானவர் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவியான இவர், ஆம் ஆத்மி அரசின் கீழ் டெல்லி பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இவர் தற்போது கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கிறார். மறுபுறம் கட்சி தலைமை இவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறது. எனவே மேற்குறிப்பிட்ட நால்வரை விட, இவருக்குத்தான் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+