"எனக்கு நானே முதலாளி!" பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை தூக்கி போட்டு டீ கடை ஆரம்பித்த பெண்! ஏன் தெரியுமா
டெல்லி: இங்கு அனைவருக்கும் பல கனவுகள் இருக்கும்.. ஆனால், அதைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நாம் இயந்திரத்தனமான வாழ்க்கையில் சிக்கிக் கொள்கிறோம்.. ஆனால், டெல்லியை சேர்ந்த இந்த பெண் அதற்கு விதிவிலக்கு.. இணையமே அவரை பாராட்டி வரும் நிலையில், அவர் என்ன செய்தார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான மிடில் கிளாஸின் கனவு ஒன்றுதான். அதாவது எப்படியாவது படித்த நல்ல சம்பளத்துடன் கூடிய ஒரு வேலையில் சென்று அமர்ந்துவிட வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருக்கும்.
சின்ன வயதில் வீடுகளிலும் கூட இதையேதான் சொல்லிச் சொல்லி வளர்ப்பார்கள். பெரும்பாலானோர் இதன் காரணமாக எதாவது ஒரு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஐடி நிறுவனங்களில் வேலைக்குச் சென்று அமர்கிறார்கள்..

இளைஞர்கள்
கொஞ்ச காலம் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு.. அதன் பிறகு தங்கள் கனவை நோக்கிச் செல்லலாம் என்றே இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கடமைகளை முடித்துக் கொண்டு உட்காரும் முன்பே காலம் கடந்துவிடுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் ஐடி துறையிலேயே அவர்கள் காலத்தைக் கழிக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு கனவுகளை அடைய வேலை செய்யத் தொடங்குவதைப் பார்ப்பதே மிகவும் அரிதான ஒரு விஷயம். அப்படியொரு சம்பவம் தான் டெல்லியில் நடந்துள்ளது.

பிரிட்டிஷ் கவுன்சில்
பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை செய்து வந்த அந்த பெண் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக டீ கடையை ஆரம்பித்துள்ளார். இந்த துணிச்சலான ஸ்டெப்பை எடுத்துள்ளவர் தான் ஷர்மிஸ்தா கோஷ்.. இவர் ஏதோ பள்ளிப் படிப்பை மட்டும் முடித்த பெண் என நினைத்துவிடாதீர்கள். இவர் ஆங்கிலத்தில் முதுகலை படிப்பை முடித்தவர். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வீரர் பிரிகேடியர் சஞ்சய் கன்னா என்பவர் தனது லிங்க்ட்இன் கணக்கில் ஷர்மிஸ்தா கோஷ் குறித்தும் அவர் ஏன் இப்போது திடீரென டீக்கடையை நடத்தி வருகிறார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

யார் இந்த பெண்
சஞ்சய் கன்னா தனது லிக்ட்இன் பக்கத்தில், "ஷர்மிஸ்தா கோஷ் ஆங்கிலத்தில் எம்ஏ படித்தவர்... பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் வேலை பார்த்து வந்த அவருக்கு நாடு முழுக்க தனது டீக்கடை செயினை திறக்க வேண்டும் என்பதே லட்சியம்.. இதற்காக அவர் தனது வேலையையே விட்டு விட்டு வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நான் டெல்லி கான்ட்டின் கோபிநாத் பஜாருக்கு சென்றேன். அங்குத் தேநீர் குடிக்க ஒரு சிறிய கடைக்குச் சென்றேன். அங்குச் சிறப்பாக ஆங்கிலம் பேசும் பெண் ஒருவர் என்னை வரவேற்றார்.

எதற்காக டீக்கடை
அந்த சிறிய கடையில் அந்த இடத்தில் அப்படியொரு நபரை நீங்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர் தனது தோழி பாவனா ராவ் என்பவருடன் இணைந்து இந்த டீக்கடையை நடத்தி வருகிறார். பாவனா ராவ் பிரபல லுஃப்தான்சா ஏர்லைன்ஸில் பணிபுரிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து இந்த டீக்கடையை நடத்தி வருகிறார்கள். தற்போது ஷர்மிஸ்தா கோஷ் டீக்கடையில் பணிபுரிந்து வருவதால்.. பாவனா ராவ் அவருக்குக் கூடுதல் பணத்தைக் கொடுத்து வருகிறார்.. இருவரும் மாலை நேரத்தில் அங்கு வந்து டீக்கடையை நடத்தி வருகிறார்கள்.

பாராட்டு
ஒருவர் எப்போதும் உயர் படிப்பு நல்ல வேலை என்று யோசிக்காமல் பிடித்த ஒன்றைச் செய்ய வேண்டும்.. சிறிய வேலையை நீண்ட காலத்திற்குச் செய்து வந்தால்.. அதில் நாம் சிறந்துவிடுவோம்.. எனவே, கனவை நோக்கி சிறிய படிகளை வைக்கத் தொடங்குவதே அதை அடைய முக்கிய இலக்குகளாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. பலரும் அதை ஸ்கீரின்ஷாட் எடுத்து அதை தங்கள் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

நெட்டிசன்கள்
கோஷின் இந்த செயலை இணையத்தில் இருக்கும் பலரும் பாராட்டி வருகின்றனர். அவரது இந்த செயல் மற்றவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அவர்கள் பாராட்டி வருகின்றனர். வேலையில் சிறியது பெரியது என்று எதுவும் இல்லை என்றும் உண்மையாக உழைத்தால் எந்த வேலையும் உச்ச நிலையை அடைய முடியும் என்றும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், பலரும் அந்தப் பக்கம் சென்றால்.. தாங்கள் கோஷின் டீக்கடையில் டீ குடிப்போம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications