யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை - ஜம்மு காஷ்மீரில் முடக்கப்பட்ட இணையதள சேவை
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவைகள் அம்மாநிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதக் குழு தலைவரான யாசின் மாலிக் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி தேசிய புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ.) கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமைதியை சீரழித்தது, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தூக்கு தண்டனை கோரிய என்ஐஏ - யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம் - பரபரப்பு தீர்ப்பு

குற்றவாளி
இந்த வழக்குகள் டெல்லியில் இருக்கும் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. 3 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து கடந்த 19 ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வசூலித்ததாக என்.ஐ.ஏ. தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி என தீர்ப்பு வெளியானது.

தூக்கு தண்டனை வழங்க கோரிக்கை
யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரம் மே 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்.ஐ.ஏ. நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. இதனிடையே யாசின் மாலிக்கிற்கு அதிபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என என்.ஐ.ஏ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தன்மீதான குற்றங்களை இந்திய உள்துறை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகி, தூக்கு தண்டனையை ஏற்கிறேன் என யாசின் மாலிக் தெரிவித்ததாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

ஆயுள் தண்டனை
இந்த நிலையில் இன்று மாலை யாசின் மாலிக்கிற்கான தண்டனை விபரத்தை டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் ஜம்மு காஷ்மீர் வன்முறை நிகழலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

இணைய சேவை துண்டிப்பு
உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், என்.ஐ.ஏ. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை கட்டுப்படுத்தவும் அங்கு இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன.