கடலில் தவித்த ஈரான் போர்க்கப்பல்.. அமெரிக்காவிடம் சிக்காமல் காப்பாற்றிய இந்தியா! பரபரப்பு சம்பவம்
டெல்லி: நம் நாட்டில் பயிற்சியை முடித்து நாடு திரும்பி கொண்டிருந்த ஈரானின் போர்க்கப்பல் மீது இந்திய பெருங்கடலில் வைத்து அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது. இதில் 87 பேர் பலியான நிலையில் 32 பேர் மீட்கப்பட்டனர். இதற்கிடையே தான் ஈரானின் இன்னொரு போர்க்கப்பலுக்கு இந்தியா பாதுகாப்பு வழங்கி வரும் முக்கிய தகவல் கிடைத்துள்ளது. ஐஆர்ஐஎஸ் லாவன் என்ற ஈரானின் போர்க்கப்பல் கடலில் தவித்தபோதுஇந்தியா உடனடியாக அந்த கப்பலை மீட்டு கொச்சியில் நிறுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவிடம் சிக்காமல் அந்த கப்பல் தப்பியுள்ளதோடு, 183 மாலுமிகள் உயிர் பிழைத்துள்ளனர்.
அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளன.. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்கா ஈரானின் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரானின் ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் நம் நாட்டுக்கு வந்திருந்தது. 'சர்வதேச கடற்படை ஆய்வு 2026' நிகழ்வில் அந்த போர்க்கப்பல் பங்கேற்றது. அதன்பிறகு பயிற்சியை முடித்து நாடு திரும்பி கொண்டிருந்தது.
கடந்த 4ம் தேதி இந்திய பெருங்கடலில் இலங்கை அருகே இந்த கப்பல் சென்று கொண்டிருந்தது. இலங்கையில் தெற்கு துறைமுகமாக காலியில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் இந்த போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. 87 பேர் பலியான நிலையில் 32 பேரை இலங்கை கடற்படை மீட்டது. இன்னும் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஈரானை கலங்க வைத்துள்ளது.
மேலும் ஈரானின் 17 க்கும் அதிகமான போர்க்கப்பல்களை மூழ்கடித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஈரானின் போர்க்கப்பலுக்கு இந்தியா பாதுகாப்பு அளித்து வரும் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அந்த போர்க்கப்பலின் பெயர் ஐஆர்ஐஎஸ் லாவன் (IRIS Lavan). இந்த போர்க்கப்பல் தற்போது கொச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் நடந்த கடற்படை அணிவகுப்பிற்காக இந்த போர்க்கப்பல் வந்திருந்தது. அதன்பிறகு ஈரானுக்கு புறப்பட்டது. கடந்த 28 ம் தேதி இந்த போர்க்கப்பல் இந்தியா அருகே கடலில் பயணித்தது. அப்போது திடீரென்று தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஈரான் போர்க்கப்பலில் இருந்து இந்தியாவிடம் உதவி கோரப்பட்டது.
இந்த கப்பலில் உள்ள 183 மாலுமிகளும் பாதுகாப்பாக கொச்சியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி நம் நாடு அனுமதி வழங்கியது. இதையடுத்து ஐஆர்ஐஎஸ் லாவன் போர்க்கப்பல் கொச்சியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இந்த போர்க்கப்பல் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட பிப்ரவரி 28 ம் தேதி தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கியது. ஒருவேளை இந்த போர்க்கப்பலும் பயணம் செய்திருந்தால் அமெரிக்காவால் வீழ்த்தப்பட்டு இருக்கலாம்.
முன்னதாக இந்தியாவில் பயிற்சி முடித்து சென்ற ஈரானின் ஐரிஸ் டெனாவை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தற்கு இந்தியா உதவவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் அது உண்மையில்லை. இலங்கை மீட்பு படையினர் உடனடியாக மீட்பு பணியை தொடங்கிய நிலையில் அதன்பிறகு இந்திய கடற்படையும் இணைந்தது.
இதுபற்றி இந்திய கடற்படை விளக்கம் அளித்தது. அதில், ''ஈரான் போர்க்கப்பலில் இருந்து அபாய சிக்னல் கிடைத்ததும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது. இலங்கையின் மீட்பு முயற்சிகளை விரைவுபடுத்த நீண்டதூரக் கடல் கண்காணிப்பை மேற்கொள்ளும் விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் உயிர் காக்கும் உடைமைகளை கொண்ட இன்னொரு விமானமும் அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஐஎன்எஸ் தரங்கினி (INS Tarangini), கொச்சியில் இருந்து ஐஎன்எஸ் இட்சக் (INS Ikshak) அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் பணிக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது'' என கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications