ஜகதீப் தன்கர் திடீர் ராஜினாமா.. தமிழ்நாட்டிற்கு "தொடர்புடையவர்".. அடுத்த துணை ஜனாதிபதி ஆகிறார்?
டெல்லி: நேற்று இரவு திடீரென குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, அந்தப் பதவிக்கான போட்டி தற்போது அரசியல் உலகில் தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மக்களவை மற்றும் ராஜ்யசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுவில் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், தன்கரின் இந்த திடீர் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணைத் தலைவர் பதவிக்கு, மேற்கு வங்க ஆளுநராக இருந்த தன்கரைப் போலவே, அனுபவம் வாய்ந்த ஒரு நிர்வாகத் தலைவரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ பாஜக பரிசீலிக்கக்கூடும். பாஜகவுக்குத் தேர்வு செய்ய ஏராளமான தலைவர்கள் உள்ளனர். ஆனால் தமிழ்நாட்டிற்கு "தொடர்பு" கொண்ட ஒருவர் இந்த பதவிக்கு பரிசீலனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டை சேராத ஆனால் தமிழ்நாடு உடன் நேரடியாக தொடர்பு கொண்ட ஒருவர் இந்த பதவிக்கு பரிசீலனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தன்கருக்கு முன்னதாக முன்னாள் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இருந்தவருமான வெங்கையா நாயுடு, 2017-ல் இந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த துணை ஜனாதிபதி யார்?
இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. அதில், "நாங்கள் இன்னும் இதைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம். ஆனால், கட்சி உறுதியான மற்றும் சர்ச்சைக்குரிய தன்மை இல்லாத ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் என்று நம்புகிறேன்," என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்று அவர் சூசகமாக தெரிவித்தார்.
ஜனதா தளம் (United) எம்பி-யான ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், 2020 முதல் அப்பதவியில் இருந்து வருவதால், அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால், அவரும் இந்த லிஸ்டில் இருக்கிறார். தன்கரின் மூன்று ஆண்டு பதவிக்காலம் ராஜ்ய சபையில் எதிர்க்கட்சிகளுடன் அடிக்கடி மோதல்கள் நிறைந்ததாக இருந்தது. மேலும், அவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயங்களில் கருத்து தெரிவித்ததால் சில நேரங்களில் அரசாங்கம் அதிருப்தி அடைந்தது. முக்கியமாக அவர் அடிக்கடி நீதிமன்றங்களுக்கு எதிராக பேசியது சர்ச்சையானது.
திடீர் திருப்பமாக, ஜகதீப் தன்கர் நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி, உடனடியாக பதவி விலகுவதாகக் கூறினார்.
குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தன்கர், "என் ஆரோக்கியத்திற்கு, உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், மருத்துவ ஆலோசனையின்படி இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
74 வயதான தன்கர், ஆகஸ்ட் 2022-ல் பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2027 வரை இருந்தது. துணை ஜனாதிபதி என்பதால் அவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் அவரது ராஜினாமா செய்தி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்குவதற்கான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் அவருக்கு அனுப்பப்பட்ட நிலையில், தன்கரின் திடீர் ராஜினாமா சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வி தற்போது தீவிரமாக நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications