5 மாதமாக போராடுகிறோம். டெல்லி எல்லைகளே எங்கள் வீடுகள்... விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 5 மாதங்களாக தாங்கள் போராட்டம் நடத்தும் டெல்லி எல்லைகள்தான் எங்கள் வீடுகள்; எங்களால் கொரோனா பரவவில்லை என விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை அதிவேகமாக தாக்கி வருகிறது. அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியிலும் வார இறுதி நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளன.

டெல்லி போராட்டம்
இதனிடையே டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டுவிட்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆக்சிஜன் வாகனங்களை விவசாயிகள் மறித்து வருவதாகவும் குற்றம்ச்சாட்டப்பட்டது.

எல்லைகளே வீடுகள்
ஆனால் இதனை திட்டவட்டமாக விவசாய சங்கத்தினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், 5 மாதங்களாக எங்களது போராட்டம் இங்கேதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த டெல்லி எல்லைகள்தான் எங்களது வீடுகள். இங்கேதான் தொடர்ந்து போராடுவோம்.

எங்களால் கொரோனா பரவியதா?
எங்களால் கொரோனா பரவவில்லை. எங்களால் கொரோனா பரவியது என யாராவது கூற முடியுமா? நாங்கள் பெரும்பாலும் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம். ஆனால் 2-வது கட்ட கொரோனா தடுப்பூசி எங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கான ஏற்பாடுகளை அரசுகள் செய்ய வேண்டும்.

தொடரும் போராட்டம்
இப்தார் விருந்து தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் சமூக இடைவெளியுடனேயே அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். ஒருவருக்கு ஒருவர் கை கூட குலுக்கிக் கொள்ளவே இல்லை. எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications