குரானில் இருந்தாலே அது கட்டாயமா? பல முஸ்லீம்கள் ஹிஜாப் அணிவது இல்லையே? உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி!
டெல்லி: ஹிஜாப் பற்றி குரானில் இருக்கிறது என்பதற்காக அது இஸ்லாமியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பழக்கம் என்று கூறி விட முடியாது என்று கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளார்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும்.
இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மொத்தம் 23 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் பெட்டிஷன் மனுக்கள் ஆகும்.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதான்ஷு துஹியா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இன்று 9வது நாள் அமர்வு விசாரணை நடைபெற்றது. இதில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பிரபுளிங் ஆஜராகி இன்று வாதம் செய்தார்.

வழக்கு
வழக்கு விசாரணை பின்வருமாறு
கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்: பர்தா அணிவதை மத ரீதியிலான உரிமை, அடிப்படை உரிமை என்று கொள்ள முடியாது.
நீதிபதி குப்தா: பர்தா அணிவது மத அடிப்படையிலான அடிப்படை உரிமை இல்லை என்றால்? மத அடிப்படையிலான பழக்கம் இல்லை என்றால் அது என்ன மாதிரியான பழக்கம்?
கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்: குரானின் ஹிஜாப் அணிவது பற்றி இருக்கலாம். ஆனால் குரானில் இருக்கும் எல்லா விஷயங்களும் அடிப்படை உரிமை அல்லது மத ரீதியிலான பழக்க வழக்கம் என்று சொல்லி விட முடியாது.

என்ன வாதம்
நீதிபதி குப்தா: குரானில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் கடவுள் சொன்ன வார்த்தைகள். அதனால் அவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயம் என்று மனுதாரர்கள் வாதம் வைக்கிறார்கள். அப்படித்தானே?
கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்: நாங்கள் குரானில் அறிஞர்கள் இல்லை. ஆனால் குரானில் இருக்கும் விஷயங்கள் எல்லாம் கட்டாயமாக மத ரீதியான பழக்கம் என்று சொல்லிவிட முடியாது. நீதிபதி குரேஷி இதே அடிப்படையில்தான் மாட்டுக்கறி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். மாட்டுக்கறி உண்ண சில மாநிலங்களில் தடை உள்ளது. அது மத ரீதியான கட்டாய பழக்கம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வில்லையே அப்படித்தான் ஹிஜாப் விவகாரமும்.

நீதிபதி கேள்வி
நீதிபதி குப்தா: இஸ்லாமில் இருக்கும் அடிப்படை கட்டாய பழக்கங்களில் ஒன்று ஹிஜாப் என்று மனுதாரர்கள் கூறுகிறார்கள். பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று அவர்கள் மதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார்களே. அந்த பழக்க வழக்கம் எதுவரை செல்லுபடியாகும் என்று சொல்ல வேண்டும்.
கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்: ஹிஜாப் கட்டாயம் என்று சொல்ல முடியாது. பல ஆயிரம் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது இல்லை. பிரான்ஸ், துருக்கி போன்ற நாடுகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டு உள்ளது. ஹிஜாப் அணியாத முஸ்லீம்கள் குறைவான முஸ்லீம்கள் என்று சொல்லிவிட முடியாது.

கட்டாயமா?
நீதிபதி குப்தா: நான் ஒரு விஷயம் சொல்ல முடியும். பாகிஸ்தானில் இருந்து ஒரு நீதிபதி இந்தியா வந்தார். அவர்களின் சிறுமிகள் இந்தியாவில் ஹிஜாப் அணியவில்லை.
கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்: நானும் நகரங்களில் பார்த்து இருக்கிறேன். இஸ்லாமிய பெண்கள் பலர் ஹிஜாப் அணிவது இல்லை.

ஹிஜாப் குரான்
நீதிபதி குப்தா: பாகிஸ்தான் பஞ்சாப்பில், இந்தியா பஞ்சாப்பில் பல இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். அங்கே பலர் ஹிஜாப் அணிவது இல்லை. உத்தர பிரதேசம், பீகாரில் பல இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணிவது இல்லையே.
கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்: அதைத்தான் நன் குறிப்பிடுகிறேன். ஹிஜாப் பற்றி குரானில் இருக்கிறது என்பதற்காக அதை கட்டாயம் என்று கூறி விட முடியாது.












Click it and Unblock the Notifications