ஐஆர்சிடிசி இணையதளத்தில் இனி நண்பர்கள், உறவினர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதா? உண்மை என்ன?
டெல்லி: ஐஆர்சிடிசி இணையதளத்தில் ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் இ-டிக்கெட் எடுக்கலாம் என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்து ரயிலில் பயணிப்பது என்பது படித்த பலருக்குமே இன்று வரை சிக்கலான விஷயமாக இருக்கிறது. ஐஆர்சிடிசி தளத்தில் பலருக்கும் கணக்கே இல்லை.. அதேநேரம் கணக்கு இருந்தாலும் அதில் தனது உறவினர்களுக்கோ, தங்களுக்கோ எப்படி டிக்கெட்டை வெற்றிகரமாக எடுப்பது என்பது பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.

இன்றும் கோடிக்கணக்கான மக்கள் உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ சொல்லித்தான் டிக்கெட் எடுக்கிறார்கள். குறிப்பாக தட்கலில் டிக்கெட் எடுப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. தட்கலில் டிக்கெட் எடுப்பதில் நிபுணத்துவம் உள்ளவர்களால் மட்டுமே தட்கலில் டிக்கெட் எடுக்க முடியும்.
இந்நிலையில் ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ள தனிநபர்கள், வெவ்வேறு குடும்ப பெயர்களுடன் கூடிய மற்றவர்களுக்கு தங்கள் கணக்கில் ரயில்வே இ-டிக்கெட் எடுக்க முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஐஆர்சிடிசி இணையதளம் பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்களுக்கு டிக்கெட்டு எடுத்து வந்தவர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரயில்வேக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், அவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள், மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ-டிக்கெட் எடுக்கலாம். இதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் தவறானது ஆகும்.
ஒருவர் தனது பயனாளர் ஐ.டி.யை பயன்படுத்தி, தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஐஆர்சிடிசி தளத்தின் மூலம் இ-டிக்கெட் எடுக்கலாம். ஒருவரின் கணக்கில் இருந்து மாதத்துக்கு 12 இ-டிக்கெட் வரை பதிவு செய்யலாம்.
கணக்கு வைத்திருப்பவர் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருந்தால், மாதத்துக்கு 24 இ-டிக்கெட் வரை எடுக்கலாம். ஆனால், ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு பயணியாவது ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்டவராக இருக்க வேண்டும். அதே சமயத்தில், இந்த டிக்கெட்டுகளை வணிக ரீதியாக விற்கக்கூடாது. அப்படி செய்வது ரயில்வே சட்டப்படி குற்றச்செயல் ஆகும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications