காற்று மாசைக் குறைக்க ஜப்பான் தொழில்நுட்பம்.. கை கொடுக்குமா.. தீவிர யோசனையில் மத்திய அரசு!
Recommended Video
புதுடெல்லி : டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை அச்சுறுத்திவரும் காற்று மாசு விவகாரத்தில் நல்ல முடிவை எட்டுவது குறித்து வரும் 3ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதங்களில் ஓரளவிற்கு நிலைமை சரியாக இருந்த நிலையில், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக காற்று மாசு பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னையிலும் சில தினங்கள் காற்று மாசு ஏற்பட்ட நிலையில், ஹைட்ரஜன் பெட்ரோல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டால் இந்த விவகாரத்தில் உரிய பலன் ஏற்படுமா என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டிருந்தது.
வடமாநிலங்கள் பாதிப்பு
கடந்த சில தினங்களாக டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசு பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், இதை தடுக்க பல நடவடிக்கைகளை அம்மாநில அரசுகள் மேற்கொண்டன. சாலைகளில் தண்ணீர் தெளிப்பது உள்ளிட்ட செயல்கள் மேற்கொள்ளப்பட்டன.
உச்சநீதிமன்றம் கேள்வி
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் காற்று மாசு குறித்த இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது, ஹைட்ரஜன் பெட்ரோல் தொழில்நுட்பம் இந்த பிரச்சினைக்கு தீர்வளிக்குமா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பல்வேறு ஆய்வுகள்
காற்று மாசிற்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணையின்போது மத்திய அரசு தெரிவித்துள்ளது. காற்று மாசுகுறித்த ஜப்பான் தொழில்நுட்ப ஆய்வும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3க்குள் அறிக்கை தாக்கல்
விசாரணையின்போது காற்று மாசு குறித்து ஜப்பானில் ஆய்வு மேற்கொண்டுவரும் விஸ்வநாத் ஜோஷியை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அறிமுகப்படுத்தினார். மேலும் இதுகுறித்த ஆய்வறிக்கையை வரும் 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்
காற்று மாசால் வடமாநில மக்கள் நுரையீரல் உள்ளிட்ட பிரச்சினைகளில் அவதிப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.