பல லட்சம் வேலைகளை பறிக்கும் AI? இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்? பொருளாதார ஆய்வறிக்கையில் பகீர்
டெல்லி: இந்த காலத்தில் ஏஐ துறை படுவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஏஐ வளர்ச்சி காரணமாக இந்தியாவில் பல லட்சம் தொழிலாளர்களின் வேலை ஆபத்தில் இருப்பதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் இதன் பாதிப்பு இருக்கும் என்ற போதிலும், இந்தியாவில் அதன் பாதிப்பு மோசமாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏஐ துறை தான் இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ என்று இருக்கும் சூழலே நிலவி வருகிறது. ஏஐ டூல்கள் நமக்கு பல்வேறு விதங்களில் மிகப் பெரியளவில் உதவி வருகிறது.

அதேநேரம் வரும் காலத்தில் ஏஐ டூல்கள் காரணமாக மிகப் பெரியளவில் வேலைகள் பறிபோகும் என்று வல்லுநர்கள் ஒரு தரப்பில் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள். இதற்கிடையே இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையிலும் ஏஐ தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
ஏஐ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாகத் தொழிலாளர் சந்தையில் இடையூறுள் ஏற்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் தற்போது செயற்கை நுண்ணறிவு இப்போது தயார் நிலையில் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை:
ஏஐ வரும் காலத்தில் சமூக பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் அதைச் சமாளிக்க வலுவான நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கையில் Labour in AI Era: Crisis or Catalyst? என்ற தலைப்பில் இது தொடர்பான விரிவான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
ஏஐ டூல்களின் தாக்கம் சர்வதேச அளவில் தொழிலாளர் சந்தையில் இருக்கும் என்ற போதிலும், இந்தியா ஒரு பெரிய நாடாக இருப்பதாலும் இங்குத் தனிநபர் வருமானம் குறைவாக இருப்பதாலும் இந்த பிரச்சினை இங்குப் பெரிதாக வெடிக்கலாம் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும்:
அந்த ரிப்போர்ட்டில் மேலும், "இது அனைத்து தரப்பையும் மோசமாகப் பாதிக்கும். இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி திறன் பாதிக்கப்படும். இன்று மனிதர்கள் செய்யும் பல முக்கிய பணிகளை வரும் காலங்களில் அதிக அறிவுத்திறன் வாய்ந்த இந்த இயந்திரங்களே மேற்கொள்ளும். சுகாதாரம், நீதி, கல்வி, வணிகம் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற துறைகளில் முக்கியமான முடிவெடுக்கும் செயல்முறைகளில் மனிதர்களை விட ஏஐ சிறப்பாக செயல்படுகிறது.
இதன் காரணமாகத் தொழிலாளர் சந்தையில், குறிப்பாக அடிப்படை ஊதிய வேலைகளில் ஏஐ டூல்கள் கவலை அளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஏஐ போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளப் பொருத்தமான திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்வது குறித்தும் சில கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளது.
வேலைகள் பறிபோகும்:
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆய்வை மேற்கோள்காட்டியுள்ள பொருளாதார ஆய்வறிக்கை, ஏஐ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக உலகளவில் கிட்டத்தட்ட 75 மில்லியன் வேலைகள் பறிபோகும் ஆபத்தில் இருப்பதாகக் கூறியுள்ளது. சுமார் 300 மில்லியன் வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கோல்ட்மேன் சாக்ஸ் கூறுவதும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்த ஊதியத்தில் பலர் வேலையில் இருக்கும் சூழலில், ஏஐ காரணமாக அவர்கள் பணி பறிபோகும் ஆபத்து இருக்கிறது என்றும் இதனால் அவர்கள் திறமையான வேலைகளுக்கு மாற்றுவதற்கு நிறுவனங்கள் உதவுவது அவசியம் என்று அந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications