இஸ்ரேலில் இருந்து டெல்லிக்கு வந்த 5வது விமானம்..23 தமிழர்கள் உள்பட 286இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
டெல்லி : இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் விஜய் திட்டத்தின் கீழ் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இன்று ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது. இதில் 23 தமிழர்கள் உள்பட 286 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் தீவிரவாதிகளால் இஸ்ரேலிய நகரங்கள் மீது தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், காசாவில் பல்வேறு நகரங்கள் மீது குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் குண்டு வீசி வருகிறார்கள்.இந்த தாக்குதலால் இதுவரை இரு தரப்பிலும் சுமார் 5000 பேர் வரை இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலால் இஸ்ரேல் பகுதியில் வசிக்கும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அச்சம் அடைந்த இந்தியர்கள் பலர் தாயகம் திரும்ப விரும்புகிறார்கள். இந்நிலையில், நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களை எளிதாக நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இந்தியா ஆபரேஷன் அஜய்யைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு முறை இஸ்ரேல் சென்று இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் இஸ்ரேலில் இருந்து 286 இந்தியர்கள், 18 நேபாள குடிமக்களுடன் 5வது விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். இதில் 23 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீட்கப்பட்ட 23 தமிழர்களில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் இன்று வந்தடைய உள்ளனர்.
இதனிடையே மத்திய அமைச்சர் எல் முருகன் கூறுகையில், "இந்தியர்கள் எங்கெல்லாம் போர் காரணமாக சிக்கித் தவிக்கிறார்களோ, அவர்களை மீட்டெடுக்க நாங்கள் முன்னுரிமை அளித்து வருகிறோம். ஏற்கனவே மத்திய அரசு ஆபரேஷன் கங்கா மற்றும் ஆபரேஷன் காவேரியை வெற்றிகரமாக நடத்தி உள்ளது.
இப்போது ஆபரேஷன் அஜய்யின் கீழ் நாங்கள் இஸ்ரேலில் இருந்து மக்களை அழைத்து வருகிறோம். இது ஐந்தாவது விமானம். இதுவரை 1180 பேரை வீட்டிற்கு அழைத்து வந்தோம். இஸ்ரேலில் வெளியேற்றத்தை தொடங்கும் முதல் நாடு நாங்கள் தான். எங்கள் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் நாங்கள் அழைத்து வருகிறோம்." என்றார்.












Click it and Unblock the Notifications