இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம்:இந்திய பொருளாதார 'கதி'? எத்தனை ஆயிரம் கோடி இழப்பு தெரியுமா? 8 பாயிண்ட்ஸ்!
டெல்லி: இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் உக்கிரமடைந்து வரும் நிலையில் சர்வேத பொருளாதாரம், இந்திய பொருளாதாரத்தின் மீதான பாதிப்பு குறித்த தகவல்கள், அறிக்கைகள் பேரதிர்ச்சிக்குரியதாக இருக்கின்றன.
பொதுவாக யுத்த காலங்களில் சர்வதேச பொருளாதாரம் மிக மோசமான சீரழிவை எதிர்கொள்வது வழக்கம். அதுவும் கொரோனா எனும் புதிய வைரஸ் பாதிப்பு ஏற்படுத்திய பேரழிவு ஒட்டுமொத்தமாக உலக நாடுகளை முடக்கிப் போட்டு ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்மூலமாக்கியது. ஆம் மனிதர்களை மட்டும் காவு கொள்ளவில்லை கொரோனா வைரஸ்... அத்தனை பொருளாதார தூண்களையும் துவம்சம் செய்துவிட்டுதான் ஓய்ந்தது.

உக்ரைன் யுத்தம்: கொரோனா கால பெருந்துயரத்தில் இருந்து உலகம் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்த இயல்புநிலைக்கு 600 நாட்களுக்கு முன்னர் வேட்டு வைத்ததுதான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம். கச்சா எண்ணெய் விலை ஏற்றம்- மாற்றம்/ இறக்கம் என தொடங்கி உலகின் பொருளாதாரத்தில் மிக கர்ண கொடூரமான பாதிப்புகளுடன் கோரத்தாண்டவமாடியது இந்த யுத்தம்.
மாஸ்கோ பேரிழப்பு: உக்ரைன் மீதான யுத்தத்தின் போது மாஸ்கோ பங்கு சந்தை 9% இழப்பை எதிர்கொண்டது. அப்படியானால் முதலீட்டாளர்க்களுக்கான இழப்பு எத்தகையதாக இருந்திருக்கும்? பொதுவாக யுத்த காலங்களில் உலக நாடுகளின் பங்கு சந்தைகள் பெரும் வீழ்ச்சியை எதிர்கொள்ளத்தான் செய்கிறது.
50 ஆண்டுகளுக்கு முன்: தற்போதைய இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தமும் மிகப் பெரும் கவலைகளை சர்வதேசத்தின் மீது 'ஏவுகணைகளை' போல வீசிக் கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1973-ல் இதேபோல இஸ்ரேல்- பாலஸ்தீனம் நடந்தது. அப்போதுதான் உலகம் முதன் முதலாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அனுபவித்தது.
மீண்டும் முதலில் இருந்தா?: 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே போன்ற ஒரு யுத்த சூழ்நிலையில் உலகம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதைய யுத்தத்தால் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதன் விலையை தாறுமாறாக உயர்த்தினால் சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் திக்கு முக்காடி மூச்சுவிட முடியாத நிலைமைக்குப் போகும்.
இந்தியா- இஸ்ரேல் வர்த்தக உறவு: இது ஒருபுறம் இருக்க நமது இந்தியா எதிர்கொள்ளப் போகும் சவால்களை நினைக்கவே பேரச்சமாக இருக்கிறது. ஏனெனில் யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேலுடன் நமது வர்த்தக உறவு அத்தகைய வலிமையானது. இஸ்ரேலின் ஆசியா வர்த்தக கூட்டாளிகளில் இந்தியா 3-வது நாடு. உலக அளவில் இஸ்ரேலின் வர்த்தக உறவில் இந்தியாவுக்கு 10-வது இடம்.
பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல்: ரஷ்யாவுக்கு அடுத்ததாக இஸ்ரேலிடம் இருந்துதான் பெருமளவு பாதுகாப்பு தளவாடங்களை நமது நாடு கொள்முதல் செய்கிறது. சுமார் ரூ74,000 கோடிக்கு இந்த வர்த்தக உறவு உள்ளது. இப்படியே யுத்தம் நீடித்தால் இஸ்ரேலிடம் இருந்து சற்று விலகி ரஷ்யாவிடம்தான் பாதுகாப்பு தளவாடங்களுக்கு இந்தியா போக வேண்டும். ரஷ்யாவும் நமக்கு வாரி வழங்கும்.. ஆனால் மிக மிக அதிகமான விலை கொடுத்தாக வேண்டும் என்கிற போது நாட்டின் பொருளாதார நிலைமை?
இஸ்ரேல் ஏற்றுமதி: மெட்டல்கள், எலக்ட்ரானிக் கருவிகள், உரங்கள், இயந்திரங்கள், என்ஜின்கள், பம்புகள், மருத்துவ உபகரணங்கள் என இஸ்ரேல் மிக அதிகளவுக்கு இந்தியாவுக்குதான் ஏற்றுமதி செய்கிறது. அத்தியாவசிய தேவைகளுக்கான உப்பு, சிமெண்ட் என ஏகத்துக்கும் இஸ்ரேல்தான் நமக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கான இஸ்ரேலின் ஏற்றுமதி சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் எனில் கணக்குப் போட்டுப் பார்க்கவேண்டும்!
இந்தியாவின் இழப்பு எப்படி இருக்கும்?: இப்படியே இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் தொடர்ந்தால் இந்தியாவின் வர்த்தக இழப்பு அளவு ரூ25,000 கோடியாக இருக்கக் கூடும் என்பது எவ்வளவு பெரிய அச்சம்! இதனால் சில பொருட்கள் விலை வரலாறு காணாத உயர்வை சந்திக்கலாமாம்!












Click it and Unblock the Notifications