மூன்றரை மணி நேரம் காக்க வைத்து... பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவமதிப்பு -விவசாயிகள் சங்கம்
டெல்லி: மூன்றரை மணி நேரம் காக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசு அவமதித்துவிட்டதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.
புதிய விவசாய சட்டங்களை முழுவதுமாக திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் கடந்த 60 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 10 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டவில்லை.

இந்நிலையில் 11-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற்ற நிலையில் அதிலும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரண்டு ஆண்டுகளுக்கு வேண்டுமானால் புதிய விவசாய சட்டங்களை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை திடமாக ஏற்க மறுத்த விவசாய சங்கப் பிரதிநிதிகள், முற்றிலும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் இரண்டாண்டு, ஓராண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறிவிட்டனர்.
இதனிடையே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின் போது அரசின் நிலைப்பாடை ஏற்பதாக இருந்தால் மட்டும் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த விவசாயிகள் புதிய விவசாய சட்டங்களை முழுவதுமாக திரும்பப்பெறக் கோரும் கோரிக்கையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனக் கூறியுள்ளனர்.
மேலும், குடியரசுத் தினத்தன்று ஏற்கனவே திட்டமிட்டப்படி, அறிவித்தப்படி டிராக்டர் பேரணி தொடரும் என விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications