இந்தியாவின் சிறந்த தேசபக்தர் யார் தெரியுமா? பளிச்சென கூறும் ரஷ்ய அமைச்சர்
டெல்லி: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு உலக நாடுகளும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், பொருளாதாரத்தைக் காக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கையை எடுத்து வருகிறது.
உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதினின் இந்த எதேச்சையான நடவடிக்கையைக் கண்டித்த உலக நாடுகள். ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.
ரஷ்யா மீது கடும் கோபத்தில் உள்ள உலக நாடுகள், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.

ரஷ்யா
இதனால் ரஷ்யா பெரும் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளது, இந்த உக்ரைன் போர் விவகாரத்தில் பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்தன. இருப்பினும், இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. உக்ரைன் போர் தொடர்பாக ஐநா மன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களிலும் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிக்கவே செய்தது.

அமைச்சர் ஜெய்சங்கர்
இதற்கிடையே ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஆலோசனை நடத்தி வருகிறது. சர்வதேச அளவில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டைப் பலரும் விமர்சித்து வருகின்றன. இதனால் இந்தியா மீதும் கூட சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த்ச சூழலில், நாட்டின் நலனுக்கு எது சிறந்ததோ அதற்கு ஏற்ப நா்டின் வெளியுறவுக் கொள்கையை இந்தியாவே முடிவு செய்யும் என்று கடந்த வாரம் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

ரியல் தேசபதக்தர்
இந்தச் சூழலில் பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "ஜெய்சங்கர் வெளியுறவுத் துறையில் அனுபவ மிக்கவர். நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என்று கூறியதன் மூலம் இந்தியாவின் உண்மையான தேசபக்தர் என்பதை அவர் நிரூபித்துள்ளார். தற்போதைய சூழலில் உலகின் பல நாடுகள் இந்த முடிவை எடுக்க தயக்கம் காட்டவே செய்யும்.

சந்தேகம் வேண்டாம்
உணவு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ரஷ்யா ஒருபோதும் மேற்கத்திய நாடுகளை நம்பி இருக்க முடியாது. ஐ.நா சாசனத்தைத் தவறாகப் பயன்படுத்தி எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவிக்காமல் உள்ள அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது. அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்" என்றார்.

தயார்
இந்தியா-ரஷ்யா உறவு குறித்துப் பேசிய செர்ஜி லாவ்ரோவ், "இந்தியா எங்களுக்கு நீண்ட கால நண்பர். எங்கள் இந்த நட்பு 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்கு ரஷ்யா முழுமையாக ஆதரித்தது. முதலில் சிறிய பொருட்களின் வணிகத்தை நாங்கள் தொடங்கினோம். பின்னர், இது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நாங்கள் தயாராகவே உள்ளோம். பாதுகாப்புத் துறையில், இந்தியா விரும்பும் எதையும் நாங்கள் வழங்க முடியும். தொழில் உபகரணங்கள் தொடங்கி தொழில்நுட்ப பரிமாற்றம் வரை அனைத்தையும் பகிர்ந்து உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications