கையில் காசு இல்லை.. சொந்த ஊர் திரும்ப முடியலை.. தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள்
Recommended Video
டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதிப் பற்றாக்குறை காரணமாக தனது சேவையை முழுவதுமாக நிறுத்தி விட்டது. இதனால் அதில் பணிபுரிந்த ஊழியர்கள் கடும் நிதிச் சுமையை சந்தித்து வருகிறார்கள்.
வானில் பறப்பது சாமானியர்களுக்கு எப்போதும் ஒரு கனவாகவே இருப்பது உண்டு. அதிலும் வானில் பறப்பதே தங்களுக்கு வேலையாக அமையும் பட்சத்தில் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேது. அப்படி பல கனவுகளோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் வேலைக்கு சென்றோர் பலர். ஆரம்பித்த புதிதில் இருந்தே உயர உயர பறந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமானப் போக்குவரத்து துறையில் கடந்த 25 ஆண்டுகளாக கோலோச்சி வந்தது.
இப்படி ஜெட் வேகத்தில் வளர்ந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2010 ம் ஆண்டு சரிவை சந்திக்க தொடங்கியது. அதன் பின்னர் தொடர்ந்து சரிவையே சந்தித்து வந்த இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தடுமாறியது.
ஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி
சம்பள பாக்கியால் அவதி
இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் நிலுவை ஏற்பட்டது. எரிபொருள் வழங்கிய நிறுவனங்களுக்கு உரிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் 125 விமானங்களை இயக்கி வந்த ஜெட் ஏர்வேஸ் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து வெறும் 5 விமானங்களை மட்டுமே இயக்கியது. அதன் பின்னர் கடந்த 17 ம் தேதியோடு தனது முழு சேவையையும் இந்த நிறுவனம் நிறுத்தி விட்டது.
20,000 பேர் வேலை இழப்பு
இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 20,000 ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. அதில் பணியாற்றிய பைலட்டுகள் உட்பட பல பணியாளர்கள் வெளியூர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு பணம் இல்லாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்களது அன்றாட செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் அவர்கள் திண்டாடி வருகின்றனர்.
காஸ்ட்லி பைக்கை விற்ற பைலட்
சொந்த ஊருக்கு ரயில் டிக்கெட் எடுக்க பணமில்லாத ஒரு பைலட் தனது விலை உயர்ந்த பைக்கை விற்று ரயில் டிக்கெட் வாங்கியுள்ளார். இது குறித்து ஜெட் ஏர்வேசின் பைலட் ஒருவர் கூறும்போது கடந்த வாரம் எங்களது ஊழியர் ஒருவரின் மகன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். அவரை காப்பாற்ற கடுமையாக போராடினோம். எங்களால் முடிந்த அளவுக்கு நிதி திரட்டினோம். இருந்தாலும் அவரை காப்பாற்ற இயலவில்லை.
ஊர் திரும்ப முடியவில்லை
இன்னொரு பைலட் தனது சகோதரியின் திருமணத்திற்கு தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் பணம் கேட்டு வருகிறார். பல ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். ரயில் டிக்கெட்டுகளுக்கு கூட அவர்களால் பணம் திரட்ட முடியவில்லை. பலர் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படியாக ஜெட் ஏர்வேசின் மேல்மட்ட ஊழியர்களில் இருந்து ஆரம்பித்து அனைத்து தரப்பு ஊழியர்களும் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறுகிறார்கள்.