ஜாதிவாரி கணக்கெடுப்பு-அமித்ஷாவிடம் பாஜக, காங். உள்ளிட்ட ஜார்க்கண்ட் அனைத்து கட்சி குழு வலியுறுத்தல்
டெல்லி: நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் அம்மாநில அனைத்து கட்சிக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இந்த குழுவில் ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர்களும் இடம்பெற்றிருந்தனர்.
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்தது முதல் ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
அதேநேரத்தில் 1931-ம் ஆண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மண்டல் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் தோராய கணக்கீட்டின் அடிப்படையில்தான் ஜாதிவாரியான இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது.

பீகார் குழு
இதனால் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கை. இந்த கோரிக்கையை அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தீவிரமாக வலியுறுத்தி பேசிவந்தார். அத்துடன் நிற்காமல் பீகார் மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளைக் கொண்ட குழுவுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் மத்திய அரசு 2011-ம் ஆண்டு சமூக, பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றை நடத்தி இருந்தது. இந்த கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட உத்தரவிடக் கோரி மகாராஷ்டிரா அரசு, உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது,. அதில், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் விவரங்கள் மட்டும் கேட்கப்படும்; இதர ஜாதியினர் குறித்த விவரங்கள் சேகரிக்க வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மறுப்பு
மேலும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நிர்வாக ரீதியில் சிக்கலானது. 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு துல்லியமானது இல்லை. அதை அலுவல் ரீதியாக பயன்படுத்தவும் முடியாது எனவும் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் இந்த பதில் பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. இந்நிலையில் பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில அனைத்து கட்சிக் குழுவும் டெல்லி சென்றது.

ஹேமந்த் தலைமையில் ஜார்க்கண்ட் குழு
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் 11 அனைத்து கட்சித் தலைவர்கள் குழு டெல்லி சென்றனர். இக்குழுவில் பாஜகவின்ம் பிரகாஷ், மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவர் அலாம்கீர் ஆலம், ஏஜேஎஸ்யூ-பி தலைவர் சுதேஷ் மக்தோ, ஆர்ஜேடி தலைவர் சத்யானந்த் போக்தா, சிபிஐ-ன் வினோத்சிங், சிபிஎம் சுரேஷ் முண்டா, அரூப் சட்டர்ஜி, என்.சி.பியின் கமலேஷ் சிங் ஆகியோரைக் கொண்ட குழு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது. இச்சந்திப்பின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதம் மற்றும் மனு அமித்ஷாவிடம் வழங்கப்பட்டது.

ஜார்க்கண்ட் அரசே நடத்தும்
மூன்று பக்கங்களைக் கொண்ட ஜார்க்கண்ட் அனைத்து கட்சிக் குழுவின் மனுவில், 1931-ல் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் கமிஷன் இடஒதுக்கீடு வழங்கியது. நாடு விடுதலை அடைந்த பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நடத்தப்படவே இல்லை. இப்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் போனால் உண்மையில் ஜாதிவாரியான மக்கள் தொகை விவரங்களே தெரியாமல் போய்விடும். சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பலவீனமானவர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த அரசியல் சாசனத்தின் 340-வது பிரிவு வழிவகை செய்கிறது என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுத்தால் ஜார்க்கண்ட் மாநிலம் தனியே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நேரிடும் என்று அம்மாநில நிதி அமைச்சர் ராமேஸ்வர் ஓரான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications