கேரளாவை தொடர்ந்து மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்தது ஜார்க்கண்ட்!
டெல்லி: கேரளாவை தொடர்ந்து தங்களது மாநிலத்தில் சிபிஐ விசாரணை நடத்த ஏற்கனவே வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்திருக்கிறது ஜார்க்கண்ட். இனி ஜார்க்கண்ட் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அந்த மாநிலத்தில் சிபிஐ எந்த ஒரு வழக்கிலும் விசாரணை நடத்த முடியாது.
மத்திய அரசின் விசாரணை அமைப்பான சிபிஐ, எதிர்க்கட்சிகளை பழிவாங்க பயன்படுத்தப்படுகிறது என்பது குற்றச்சாட்டு. இதனால் சிபிஐ தங்களது மாநிலங்களில் விசாரணை நடத்துவதற்கு ஏற்கனவே கொடுத்த பொது ஒப்புதலை மகாராஷ்டிரா, மேற்குவங்கம், மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்கள் ரத்து செய்தன. இந்த வரிசையில் இப்போது 7-வது மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலமும் இணைந்திருக்கிறது.
சிபிஐ அமைப்பான Delhi Special Police Establishment Act- ன் கீழ் செயல்படுகிறது. அதாவது டெல்லி போலீசின் ஒரு பிரிவாகவே சட்டப்படி சிபிஐ அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் செயல்பாட்டு எல்லை என்பது டெல்லிக்குட்பட்டது மட்டும்தான்.

கொல்கத்தா ஹைகோர்ட்
ஆகையால் பிற மாநிலங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு அந்தந்த மாநில அரசின் ஒப்புதல் தேவை. இதற்கான பொது ஒப்புதலை மாநிலங்கள் சிபிஐக்கு வழங்கி இருந்தன. அதேநேரத்தில் அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றமானது, சிபிஐ-ன் விசாரணை எல்லையை விரிவுபடுத்தியது; மேற்கு வங்கத்தில் மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஐ விசாரணை நடத்தலாம் என கூறியது. இங்கிருந்துதான் சிபிஐ அதிகார வரம்பு, பொது ஒப்புதல் பிரச்சனை தொடங்கியது.

பொது ஒப்புதல் விவகாரம்
சிபிஐ-ன் சட்ட விதிகளில் மாநிலங்களின் பொது ஒப்புதலை பெற்று விசாரிக்க வேண்டும் என்றும் அதேநேரத்தில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ தாமாக விசாரிக்கலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இந்த பொது ஒப்புதல் என்பது குறிப்பிட்ட சில வழக்குகள், பொதுவான வழக்குகள் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இனி ஒவ்வொரு வழக்குக்கும்...
மாநில அரசுகள் பொது ஒப்புதல் வழங்கி இருந்தால், ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் மாநில அரசின் அனுமதியை பெற்றுக் கொண்டிருக்க தேவை இல்லை. இப்போது பொது ஒப்புதலை மாநில அரசுகள் திரும்பப் பெற்றால், ஒவ்வொரு வழக்குக்கும் மாநில அரசின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டிய நெருக்கடி சிபிஐக்கு ஏற்படுகிறது. அப்படி மாநில அரசு அனுமதி கொடுக்காமல் மாநிலங்களுக்குள் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவும் முடியாது.

மத்திய அரசு மீது புகார்
லஞ்ச ஊழல் வழக்கு, பொருளாதார குற்றங்கள் வழக்கு, சிறப்பு குற்றங்கள் தொடர்பான வழக்குகள் இவைகளை சிபிஐ விசாரிக்கலாம். ஆனால் சிபிஐ, மத்திய அரசின் எதிர்க்கட்சிகள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பது மாநில அரசுகளின் குற்றச்சாட்டு. இதனால் இப்போது 7 மாநிலங்களும் சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்து அதாவது வாபஸ் பெற்றிருக்கின்றன.












Click it and Unblock the Notifications