ஜார்க்கண்ட் கல்வித்துறை அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்! தலைவர்கள் இரங்கல்
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது 'ஜார்க்கண்ட் முக்தி மோர்சா' கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்தான் ராம்தாஸ் சோரன். இவர் அம்மாநில கல்வி துறை அமைச்சராகவும் இருக்கிறார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்திருக்கிறார்.
உடல் நலப்பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

அவரது மறைவை அம்மாநில முதல்வர் ஹேமந்த சோரன் உறுதி செய்திருக்கிறார். ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வாரும் அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். "ஜார்க்கண்ட் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராம்தாஸ் சோரனின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவு மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், இந்த துயரத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு அளிக்கப் பிரார்த்திக்கிறேன்" என்று அவர் X தளத்தில் பதிவிட்டார்.
ஆகஸ்ட் 2 அன்று விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்ட ராம்தாஸ் சோரன், அன்று முதல் உயிர்க்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அவர் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். பல்துறை மூத்த நிபுணர்கள் குழு தீவிர மருத்துவ சிகிச்சையை அளித்து வந்தது.
ஆகஸ்ட் 2 அன்று தனது இல்லத்தில் குளியலறையில் விழுந்ததில் அமைச்சருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. டெல்லிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, அவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜார்க்கண்ட் பாஜகவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதேவ் கூறுகையில், "கடந்த 12 நாட்களில் ஜார்க்கண்டின் இரண்டு பெரிய தலைவர்கள் காலமானார்கள். ராம்தாஸ் சோரன் ஜார்க்கண்டின் கோல்ஹான் பகுதியில் முக்கியப் பங்காற்றினார். அவர் 'ஜார்க்கண்ட் ஆந்தோலன்' இன் தூண் என்று அறியப்பட்டார். ராம்டாஸ் சோரன் மிகச் சிறந்த தலைவர்" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications