உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் என் வி ரமணா.. அயோத்தியா முதல் காஷ்மீர் வழக்கு வரை... யார் இவர்?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது எஸ்.ஏ போப்டே உள்ளார். அவரது பதவிக்காலம் ஏப்ரல் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அவருக்குப் பின் அடுத்த தலைமை நீதிபதியாக யார் பதவியேற்பார் என்பதில் பெரும் கேள்வி நிலவியது.
அடுத்த தலைமை நீதிபதி
கடந்த மாதம் தனக்குப் பின் என்.வி ரமணாவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக போப்டே பரிந்துரை செய்திருந்தார். இந்நிலையில் இந்த பரிந்துரையை ஏற்று, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
யார் இந்த என் வி ரமணா
தற்போது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ள என்.வி. ரமணா ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ரமணா வரும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை ஒரு வருடம் நான்கு மாதங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார்.
நதி நீர் சட்டங்கள்
என்.வி. ரமணா சுமார் 40 ஆண்டுகள் நீீதித்துறையில் அனுபவம் கொண்டவர். ஆந்திர உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில தீர்ப்பாயங்கள் பலவற்றிலும் அவர் இருந்துள்ளார். அரசியலமைப்பு, குற்றவியல், சேவை மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதி சட்டங்களில் என்.வி. ரமணா நிபுணத்துவம் பெற்றவர். காஷ்மீரில் இணையச் சேவையை மீண்டும் வழங்க உத்தரவிட்ட அமர்வில் இடம் பெற்றிருந்தவர் என்.வி. ரமணா. இதுதவிர அயோத்தியா வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் நீதிபதியாக இருந்தவர் என்.வி. ரமணா.
கடந்து வந்த பாதை
கடந்த 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி ஆந்திரா உச்ச நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 மார்ச் 10 முதல் 2013 மே 20 வரை செயல்பட்டார். அதைத்தொடர்ந்து ஓர் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார். 2014ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து வருகிறார்.