சபாஷ்! பாஜகவுடன் கைகோர்த்த காங்கிரஸ்! ஜோக்கரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! இது லிஸ்ட்லயே இல்லையே
டெல்லி: கனடாவில் வசித்து வந்த காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை இந்தியா முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில் பாஜகவுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்து ஜஸ்ட்டின் ட்ரூடோவை ஜோக்கராக்கி உள்ளது.
இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மக்கள் நிறைந்து காணப்படுகின்றனர். இதுதவிர நாட்டின் பிற இடங்களிலும் அவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சீக்கியர்களுக்கு தனிநாடு தொடர்ந்து கோரப்பட்டு வருகிறது.

இந்தியாவை பிரித்து சீக்கியர்களுக்கு தனி நாடு வழங்க வேண்டும் என இதற்கு முன்பு இருந்தே போராட்டங்களை காலிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் முன்னெடுத்து வருகின்றன. மேலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என சீக்கியர்கள் தஞ்சம் அடைந்த நாடுகளில் மீண்டும் மீண்டும் காலிஸ்தான் கோரிக்கையை தீவிரவாதிகள் முன்னெடுத்து வருகின்றனர். அதோடு வெளிநாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டம் செய்தல், இந்தியாவில் சதி வேலைகளை தீட்டுதல் உள்ளிட்ட செயல்களில் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு செய்து வருகிறது. இதனை வெற்றிகரமாக இந்தியா முறியடித்து வருகிறது.
இருப்பினும் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் கோரிக்கை மட்டும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் கனடாவில் இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மார்ச் மாதம் போராட்டம் நடத்தினர். இதன தடுக்க இந்தியா கோரிக்கை வைத்தும் அதனை கனடா மறுத்தது. இதற்கிடையே தான் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்டப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கனடா உளவுத்துறை நம்பதகுந்த வகையிலான ஆதாரங்களை வைத்துள்ளது. இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதனை இந்தியா முற்றிலுமாக மறுத்தது. இருப்பினும் கனடா தொடர்ந்து இந்தியாவின் மறுப்பை ஏற்கவில்லை. அதோடு கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தொடர்ந்து இந்தியா மீதான தனது குற்றச்சாட்டில் உறுதியாக உள்ளார். அதோடு இந்திய தூதரை கனடா வெளியேற்றிய நிலையில் இந்தியாவும் கனடா தூதரை வெளியேற உத்தரவிட்டுள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான மோதல் என்பது அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினையில், நாட்டு நலனே முக்கியம் என்றும் மத்திய அரசுக்கு முழு ஆதரவை அளிப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணம் குறித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அதோடு பாகுபாடுகளை மறந்து மத்தியில் ஆளும் பாஜகவுடன், காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் மானு சிங்வி தனது எக்ஸ் பக்கத்தில் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது:
‛‛இந்த கிரகத்தில் தற்போதுள்ள தலைவர்களில் ஜஸ்டின் ட்ரூடோ மாறுவேடம் போடும் மிகப்பெரிய ஜோக்கராக உள்ளார். பிற இந்திய எதிர்ப்பு பிரசாகர்களை போலவே இவரே இந்தியாவுக்கு ஆபத்தானவர். இதனால் டெல்லியில் உள்ள கனடா தூதரகத்துக்கான பாதுகாப்பை குறைக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், ‛‛தீவிராதத்துக்கு எதிரான நமது நாட்டின் போரில் எந்த சமரசமும் கிடையாது என்பதை காங்கிரஸ் நம்புகிறது. அதோடு தீவிரவாதம் என்பது இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் போது அதில் சமரசமே கிடையாது. நமது நாட்டின் நலனே அனைத்து நேரங்களிலும் முதன்மையானதாக வைக்கப்படும்" என்று தெரிவித்து மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications