காலிஸ்தானி பயங்கரவாதிகளை..கொசுக்களை போல நசுக்கியவர் இந்திரா காந்தி.. புதிய சர்ச்சையை கிளப்பிய கங்கனா
டெல்லி: ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களைக் கொசுக்களைப் போலத் தனது ஷூவின் கீழ் நசுக்கினார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் தனது இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருகிறது. முதலில் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு
இதனால் அவரது ட்விட்டர் கணக்கு இந்தாண்டு மே மாதம் நிரந்தரமாக முடக்கப்பட்டது. இப்போது இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பியுள்ள அவர், அதிலும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வருகிறது.
அடுத்த சர்ச்சை
இன்றைய தினம் கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலிஸ்தானி பயங்கரவாதிகள் இன்று அரசை தங்களுக்கு ஏற்றப்படி வளைக்கலாம். ஆனால் நாட்டின் ஒரே ஒரு பெண் பிரதமர் (இந்திரா) அவர்களைத் தனது ஷூவில் போட்டு நசுக்கினார். அவர் ( இந்திரா) இந்த தேசத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுத்திருந்தாலும் கொசுக்களைப் போல் தன் உயிரைப் பணயம் வைத்து அவர்களை (காலிஸ்தானி பயங்கரவாதிகளை) நசுக்கினார். அவர் உயிரிழந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட இன்றும் அவரது (இந்திரா) பெயரைக் கேட்டால் அவர்கள் நடுங்குகிறார்கள். அவரை போன்ற ஒரு நபர் தான் இப்போது தேவை" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திரா காந்தி
மேலும், இன்ஸ்டாகிராமில் அடுத்த ஸ்டோரியில் இந்திரா காந்தி இருக்கும் படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், "கலிஸ்தானி இயக்கம் எழுச்சி பெறும் நிலையில், அவரது (இந்திரா) கதை முன்னெப்போதையும் விட இப்போது தான் மிகவும் பொருத்தமானது" எனப் பதிவிட்டுள்ளார். சீக்கியர்களை காலிஸ்தானியர்கள் என்றும் 1984 ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்தும் அவர் கூறிய கருத்துகள் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
போலீசில் புகார்
ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகத் தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வரும் கங்கனா ரனாவத், விவசாயிகள் கடும் போராட்டத்திற்குப் பிறகு விவசாய சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்த சில நாட்களில் இந்த சர்ச்சை கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்தச் சர்ச்சைக் கருத்துக்கு எதிராக கங்கனா ரனாவத் மீது டெல்லி மந்திர் மார்க் காவல் நிலையத்தின் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
குருத்வாரா அமைப்பு எதிர்ப்பு
நடிகை கங்கனா ரனாவத்தின் இந்தச் சர்ச்சை பதிவுக்கு குருத்வாரா அமைப்பும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கங்கனா ரனாவத் சீக்கியர்களை இழிவான மற்றும் அவமதிக்கும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளதாகவும் சாடியுள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவர் சீக்கிய சமூகத்தை காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுகிறார். மேலும் (மறைந்த முன்னாள் பிரதமர்) இந்திரா காந்தியின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த 1984 மற்றும் அதற்கு முன் நடந்த இனப் படுகொலையையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்" என்று அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதல்முறை இல்லை
கங்கனா ரனாவத் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவிப்பது இது முதல்முறை இல்லை. முன்னதாக இந்தியாவுக்கு 2014ஆம் ஆண்டு தான் ரியல் சுதந்திரம் கிடைத்தது என்றும் 1947ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை என்று கடந்த சில வாரங்களுக்கு முன் கங்கனா ரனாவத் கூறியிருந்தது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.