திடீரென மோடியை சந்தித்த கனிமொழி.. நன்றி சொல்லி வைத்த முக்கிய கோரிக்கை.. பின்னணி இதுதான்
டெல்லி: திமுக எம்பி கனிமொழி இன்று திடீரென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடிக்கு, கனிமொழி எம்பி நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின் பின்னணி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால் தூத்துக்குடி எம்பி கனிமொழி டெல்லியில் உள்ளார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்து பேசினேன். தூத்துக்குடியில் உள்ள வஉசி துறைமுகத்தில் போக்குவரத்து மையம் உள்பட எனது தொகுதி மற்றும் தமிழ்நாடு தொடர்பான பிரச்சனைகளை அவரிடம் எடுத்து கூறினேன். அதோடு தூத்துக்கு விமான நிலையத்தில் மேம்படுத்த அளித்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்தேன்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி கடந்த 26-ந்தேதி தொடங்கி வைத்தார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ321 ரக விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் கொண்டு வரப்பட்டன.
இந்த புதிய முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து புதிய முனையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது, பயணிகள் முனைய செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வந்தன. தற்போது விமான நிலையத்தின் புதிய முனையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் கனிமொழி எம்பி நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications